வடபழஞ்சி: `ஓர் உயிரிழப்புக்குப் பிறகும் தொடரும் பாதுகாப்பு குறைபாடு' - ரயில்வே க...
`இன்னும் 2 நாள்களில் இறந்துவிடலாம்' - சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டம்; செவிமடுக்காத அரசு!
இன்று 18-வது நாள்!
புது டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி 18 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இது குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை பேச்சு, மூச்சு இல்லை.
நீட் வினாத்தாள் கசிவு... அதனால் இறந்த மாணவர்களுக்கான நீதி ஆகியவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கடந்த ஜூன் 20-ம் தேதி போராட்டத்தைத் தொடங்கியது காக்ரோச் ஜனதா கட்சி.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜூன் 28-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் கல்வியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்.
அவரும், காக்ரோச் ஜனதா கட்சியும் தொடர்ந்து தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும், மத்திய அரசிடம் இருந்து எந்தவொரு அசைவும் இல்லை.
போராட்டம் தொடர்ந்து கொண்டே வருகிறது. சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வரவில்லை.
18 நாள்களாக தண்ணீர் குடித்தும், உப்பை மட்டுமே உண்டு வருவதால் நாளுக்கு நாள் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது.
சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, "சோனம் வாங்சுக்கின் தசை, வலிமையை இழக்க தொடங்கிவிட்டது. அவருக்கு கடுமையான உடல் வலி இருக்கிறது.
18 நாள்களில் 8.4 கிலோவிற்கு மேல் உடல் எடை குறைந்துவிட்டது.

உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று அவரிடம் கேட்டால், என்னிடம் இதை கேட்பதற்கு பதிலாக, ஏன் மத்திய அரசு நமது குரலை கேட்க மறுக்கிறது என்று அவர்களிடம் கேளுங்கள் என்கிறார்" என்று கூறுகிறார்.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சமஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வரை பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இது எதற்கும் வாங்சுக் செவி மடுப்பதாக இல்லை.
இதனால், இவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ராகேஷ் குமார் சைனி.
அந்த மனுவில், 'சோனம் வாங்சுக்கை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றி, தேவைப்பட்டால் கட்டாய உணவு அளித்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உத்தரவிடப்பட வேண்டும்.
ஒருவேளை இவர் மரணமடைந்தால் அது ஒட்டுமொத்த நாட்டிற்கும், உலகிற்கும் அவமானமாக மாறும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால், இன்னும் 2 நாள்களில் உயிரிழக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்போது கழியும் ஒவ்வொரு நொடியும் சோனம் வாங்சுக்கிற்கு அபாயமாக மாறி வருகிறது. ஆனால், அது குறித்து மத்திய அரசு துளியும் கவலைப்படவில்லை போலும்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 14 மாணவர்கள் நீட் தேர்வால் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளனர்.
கூடுதலாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவினால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஆண்டு மே, ஜூன் என இருமுறை அழுத்தத்தை சந்தித்தனர்.
'நீட் தேர்வு நடத்தியே தீர வேண்டும்' என்று விடாப்பிடியாக இருக்கும் மத்திய அரசு, அதே ஆர்வத்தை அதை சரியாக நடத்தி முடிப்பதிலும் காட்ட வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை.
அதற்கான நியாயத்தைக் கேட்டு ஒருவர் போராடுகையில், அவருக்கான தகுந்த பதிலை தர வேண்டும் என்பது மத்திய அரசின் தார்மீகப் பொறுப்பு.
அதுவும் அவர் உயிரை பணயம் வைத்து போராடும் போது, மத்திய அரசுக்கு பொறுப்பு இன்னும் கூடியிருக்க வேண்டும்.
ஆனால், அப்படி எதுவும் மத்திய அரசிடம் வெளிப்படவில்லை.
நீட் தேர்வு குளறுபடிகளுக்கும், சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கும் வாயைத் திறக்க மத்திய அரசுக்கு எப்போது மனது வரும் என்று பார்ப்போம்.














