FIFA: கத்தார் அணியில் ஒரு கண்ணூர் புயல்! தந்தையின் கனவை சுமந்து உலகக்கோப்பையில்...
உருவான இரண்டாம் அணி; மம்தாவுக்கு பெர்சனல் Loss; வேடிக்கை பார்க்கும் பாஜக- சிவசேனா ஆகிறதா திரிணாமுல்?
2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் ஆட்சியில் பறந்த திரிணாமுல் காங்கிரஸின் கொடியை இறக்கி, தங்களது காவி கொடியைப் பறக்கவிட்டிருக்கிறது பாஜக.
திரிணாமுல் காங்கிரஸின் நிறுவனரான மம்தா பானர்ஜி இந்தத் தேர்தலில் தோல்வியுற்றதுதான், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியின் உச்சம்.
தோல்வியுற்றும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று முதலில் மம்தா பானர்ஜி அடம்பிடித்தார்.
ஆனால், அவர் ராஜினாமா செய்தாலும், செய்யாவிட்டாலும் தேர்தலில் வென்ற நபர் ஆட்சி அமைக்கலாம் என்கிற அரசியல் சாசனத்தின் படி, சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

பெர்சனல் தோல்வி
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி என்று பார்ப்பதை விட, மம்தா பானர்ஜியின் பெர்சனல் தோல்வியாக தான் பார்க்க வேண்டும்.
இதற்கு நேற்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய போராட்டங்களின் காட்சிகளே சாட்சி.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
இதை எதிர்த்து தான் மம்தா பானர்ஜி போராட்டத்தை அறிவித்திருந்தார்.
மேற்கு வங்கத்தின் தற்போதைய எதிர்க்கட்சி திரிணாமுல் காங்கிரஸ். நடந்து முடிந்த தேர்தலில், திரிணமுல் காங்கிரஸில் இருந்து 80 எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
திரிணமுல் காங்கிரஸிற்கு மொத்தம் 29 எம்.பி-கள் உள்ளன.
ஆனால், மம்தா பானர்ஜி நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை வெறும் 8 மட்டுமே. எம்.பி-க்களின் எண்ணிக்கை 6.
இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் மம்தாவின் செல்வாக்கு குறைந்துவிட்டதைக் காட்டுகிறது.

இரண்டாவது அணி
மேலும், எதிர்க்கட்சித் தலைவராக மம்தா தேர்ந்தெடுத்தவர் சோபன்தேப் சட்டோபாத்யாய். ஆனால், இவரை நியமிப்பதற்காக கொடுக்கப்பட்ட ஆவணங்களில் இருந்த கையெழுத்துகள் போலியானது என்று கட்சிக்குள் குரல்கள் எழுந்தன.
இதில் முக்கியமான குரல்கள் எம்.எல்.ஏ-க்கள் சந்தீபன் சாஹா மற்றும் ரிதபிரதா பானர்ஜி உடையது. அதனால், இவர்கள் இருவரும் உடனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
தற்போது ரிதபிரதா பானர்ஜி தனக்கு 59 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது என்றும், அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் மேற்கு வங்க சட்டமன்றத்தில் வந்து நிற்கிறார்.
பூசலுக்கு என்ன காரணம்?
உட்கட்சிப் பூசலுக்கு பாஜக தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார் மம்தா பானர்ஜி.
ஆனால், அரசியல் விமர்சகர்களோ, திரிணாமுல் காங்கிரஸின் உட்கட்சிப் பூசலுக்கு சீனியர் தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டதும், மம்தாவிற்கு பின், திரிணாமுல் காங்கிரஸின் தலைமையாக மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை முன்னிறுத்துவதும், அபிஷேக் பானர்ஜி ஐ-பேக் நிறுவனத்தை ஓவராக சார்ந்திருந்ததும், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாததும்தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

சந்தீபன் சாஹா மற்றும் ரிதபிரதா பானர்ஜி தலைமையிலான குழு 'கட்சித் தாவல் சட்ட'த்தின் கீழ் சிக்கிக் கொள்ளாமல், புதிய தலைமையை அமைத்துவிட வேண்டும் என்று பிளான் போடுகிறது.
அப்படி செய்தால் தான், 'தாங்கள் தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ்' என்கிற இமேஜை மக்களிடையே உருவாக்க முடியும்.
இப்போது தேர்தலில் தோற்றிருந்தாலும், திரிணாமுல் காங்கிரஸிற்கு என மேற்கு வங்கத்தில் நிச்சயம் இடம் இருக்கிறது. அதை தங்கள் பக்கம் இழுக்க விரும்புகின்றனர் ரிதபிரதா பானர்ஜி & கோ.
பாஜக-வின் ஆசை
இந்த அனைத்து காட்சிகளும் மகாராஷ்டிராவின் சிவ சேனாவை கண்முன்னே கொண்டு வருகின்றது.
ஆனால், ஏக்நாத் சிண்டேவின் சிவ சேனாவை பாஜக அணைத்துக் கொண்டது போல, திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பிரிந்து வருபவர்களை பாஜக சேர்த்துகொள்ளாது என்று கூறப்படுகிறது.
காரணம், ஒருவேளை, திரிணாமுலில் இருந்து அதிருப்தியில் பிரிந்து வருபவர்களை பாஜக சேர்த்துக் கொண்டால், மக்களின் அனுதாப அலை மம்தாவின் பக்கம் திரும்பும். அது மம்தாவிற்கு சாதகமாகவே அமையும்.
அதை வைத்து மம்தா சாதுர்யமாக காயை நகர்த்துவார்.

அதனால், திரிணாமுல் காங்கிரஸ் உட்கட்சிப் பூசலில் தள்ளாடுவதை மட்டுமே பாஜக ரசிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சரிந்தால், பாஜக-விற்கு போட்டியாக காங்கிரஸும், பிற இடதுசாரி கட்சிகளும் எழும். இதை பாஜக துளியும் விரும்பாது.
முக்கியமாக, இந்த உட்கட்சிப் பூசல் மம்தாவின் தேசிய அரசியல் ஆசைக்கும் முட்டுக்கட்டை போடும்.
ஆக, திரிணாமுல் காங்கிரஸிற்குள் உட்கட்சிப் பூசல் என்பது ஒரே கல்லில் மம்தாவின் அயர்ச்சி, காங்கிரஸ் எழுச்சி தடுப்பு என பாஜவக-விற்கு இரண்டு மாங்காய்கள்.














