`முன்னுரிமை அடிப்படையில் குற்றங்களை கட்டுப்படுத்த..!'- புதிய டிஜிபி மகேஷ் குமார்...
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்: முதல்வர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை... நினைவுகூர்ந்த தலைவர்கள்!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா இன்று (03-06-26) தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, கனிமொழி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டடோர் இருந்தனர். அவர்களும் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் தங்கள் சார்பில் மரியாதை செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``‘கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் கண்ணியத்திற்காகவும், சமூக நீதிக்காகம், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் போராடுவதிலேயே செலவிட்டார். அவர் வெறும் முதலமைச்சர் மட்டுமல்ல - ஓர் எழுத்தாளர், கவிஞர் மற்றும் சிந்தனையாளர். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பை அவர் உறுதியாக நம்பினார். அவரது பிறந்தநாளில் எனது பணிவான அஞ்சலிகள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முதல்வர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்." என மரியாதை செலுத்தியிருக்கிறார்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ``சமத்துவப் பெரியர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். சமூகநீதி மண்ணாய்த் தமிழகத்தைச் சமைத்த மகத்தான கருத்தியல் பேராளுமை கலைஞர். பெரியாரின் கனவை நனவாக்கும் வகையில் சமத்துவபுரம் கண்ட சமூகப்புரட்சியாளர் கலைஞர். உயர்கல்வி மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம், எளியோருக்கான அதிகாரவலிமை போன்றவற்றை நிலைநாட்டி, புதியதொரு தமிழ்நாட்டைச் செதுக்கிய அவரது போற்றுதலுக்குரிய பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``கலைஞரின் பிறந்தநாளில் எனது மதிக்கத்தக்க அஞ்சலிகள். தமிழகத்தின் அன்பிற்குரிய தலைவரான அவரது சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான வாழ்நாள் அர்ப்பணிப்பு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மறுமலர்ச்சி அடையச் செய்தது. கலை மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பொதுவாழ்விற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, என்றும் ஆழமான மரியாதையுடன் நினைவு கூறப்படும்." எனப் புகழ்ந்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ``தமிழர் பெருமை, சமூக நீதி, மொழி உரிமை, தொலைநோக்கு பார்வை மற்றும் மாநில சுயாட்சிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான இன்று அவருக்கு எங்களது புகழஞ்சலி. அவரது எழுத்துப் பணியும், சிந்தனைகளும், மக்கள் நலப் பணிகளும் என்றும் நமது தலைமுறைகளை வழிநடத்தும்." எனத் தெரிவித்திருக்கிறார்.
நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன், ``என்றும் உள்ளவர் - கருத்தாக, கலையாக, கருணையாக. கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் அவரையும் அவர் புகழையும் வாழ்த்துவது என் பெருமை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மதிமுக எம்.பி. துரை வைகோ, ``தமிழ்நாட்டின் அரசியலில் ஆளுமைமிக்க அடையாளமாக திகழ்ந்தவர், திராவிட இயக்க வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயத்தை தனக்கென தன் அசைக்க முடியாத சாதனைகளால் உருவாக்கியவர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சரித்திரப் புகழை நினைவுகூர்ந்து, அவரது பிறந்த நாளான இன்று (03.06.2026) அவருக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். கலைஞர் அவர்களின் சிந்தனைகளும், சாதனைகளும் என்றென்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும்." எனத் தெரிவித்திருக்கிறார்.














