Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
`எங்கள் கதையை எங்களால்தான் எழுத முடியும் என்பதன் விளைவுதான் திருநங்கை ப்ரஸ்!' - நிறுவனர் கிரேஸ் பானு
தமிழ் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 49-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரும் அறிவுப் பெருவிழாவாகக் கருதப்படும் இந்தப் புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இம்மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை புத்தகக் காட்சியில் முதன்முறையாக இந்த ஆண்டு 1,000க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை புத்தகக் காட்சி அரங்கில் இந்தியாவின் முதல் திருநங்கை பட்டதாரியும், திருநங்கை ப்ரஸ் நிறுவனருமான கிரேஸ் பானு அவர்களை சந்தித்து உரையாற்றினோம்.
``சமூகத்தில் எங்களைப் புறக்கணிப்பது போல எழுத்துலகிலும் புறக்கணித்தார்கள். எங்களுக்கான இடத்தை நாங்கள் தான் உருவாக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். எழுத்தாயுதத்தை ஏற்போம், ஆணாதிக்கத்தை உடைப்போம் என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு இந்த `திருநங்கை ப்ரஸ்'ஐ தொடங்கினோம்.
தொடர்ந்து வெற்றிகரமாக நான்காவது ஆண்டாக சென்னை புத்தகக் காட்சியில் எங்களுக்கென அரங்கு அமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இங்கு அரங்கு அமைப்பதற்கே எங்களுக்கு பல பிரச்சனைகள் வந்தது. அதையெல்லாம் தாண்டி இங்கு அரங்கை அமைத்து இருக்கிறோம்.

எங்களுடைய கதையை நாங்கள் தான் எழுத வேண்டும்!
முதலில் ஓர் அரங்காக இருந்தது, இன்று இரண்டு அரங்குகளாக விரிவடைந்து இருக்கிறது. திருநர் எழுத்துக்களை ஆண், பெண் தலைமை கொண்ட பதிப்பகத்திடமே கொடுத்து வந்தோம். ஆனால் எங்களுடைய கதையை நாங்கள் தான் எழுத வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து ஒவ்வொரு முன்னெடுப்பையும் எடுத்தோம்.
இதுவரை 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறோம். 2025ல் 14 புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பல வருடங்களாக திருநங்கை எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்கள். ஆனால் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதற்காகத்தான் இந்த இடத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.
எப்போதுமே எங்களை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்பதைத் தாண்டி, முதலில் நாங்கள் எங்களை அங்கீகரிக்கிறோம் என்பதின் வெளிப்பாடு தான் இது. எங்கள் எழுத்துக்களை வெளி உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்துதான் இதைக் கொண்டு வந்திருக்கிறோம்.

இளம் திருநங்கைகளும், திருநம்பிகளும் எழுத்துலகில் தற்போது வளர்ந்து வருகிறார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். அது மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறோம். கடைசி ஆண்டு எனது "பஸ்தி" புத்தகம் அதிக அளவில் விற்பனையானது. சமீபத்தில் அதிக விற்பனையாகும் புத்தகங்களில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்ட பி.கே ரோஸி வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆகும்.
சமூகத்தில் திருநங்கைகள் மீதான பார்வை மாற, சமூகத்தில் எங்கள் வாழ்வை அறிய எனது ஐந்து புத்தக பரிந்துரைகள்.
1. "பஸ்தி" நான் எழுதிய புத்தகம். இதை படித்தால் உங்களுக்கு சிறிய அளவிலாவது எங்களைப் பற்றிய புரிதல் உண்டாகும்.
2. எங்களை அரசியல் கண்ணோட்டத்தில் காண வேண்டுமென்றால் "கிரேஸ் பானுவின் சிந்தனைகள்" என்ற எனது புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.
3. கவிதை சார்ந்த புத்தகங்களாக வாசிக்கும் போது "காலிடுக்கில் ஒப்பந்தங்கள்" திருநங்கை ஆல்கா எழுதிய புத்தகம் இது.
4. "திருநம்பி சோனேஷ் அவர்களின் "உன்னைக் கொடு" திருநங்கைகளின் பார்வையில் எவ்விதமான உணர்வுகள் வெளிப்படுகின்றன என்று எழுதப்பட்ட ஒரு கவிதை நூல்.
5. புதிதாக எங்கள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள "கோவில்பட்டி டூ சென்னை வழித்தடங்கள்" தற்போதைய திருநங்கைகள் வாழ்வை பற்றிய சிறந்த புத்தகமாக வெளிவந்திருக்கிறது.!

















