அமெரிக்காவிற்கு ஜாக்பாட்: 'செலவே இல்லாமல் 6,500 கோடி பேரல் எண்ணெய்' வெனிசுலாவின்...
`எல்லாம் நல்லாத்தானே போச்சு... ஏமாற்றம்!' – கேப்டன் பதவி பறிப்பு குறித்து சூர்யகுமார் யாதவ் வேனனை
இந்திய டி20 அணியின் கேப்டனாக தொடர்ந்து பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற சில மாதங்களிலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாகியது.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ராவின் ‘Baith and Bol’ youtube நிகழ்ச்சியில் சூர்யகுமார் மனம் திறந்து பேசியுள்ளார்.
தனது பெயர் அணியில் இல்லை என்பதைப் பார்த்தபோது சிரித்துவிட்டதாகக் கூறிய சூர்யகுமார், “ஒன்றரை மாதமாக, ‘இது எப்படி நடக்க முடியும்? எப்படி சாத்தியம்?’ என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நாம்தானே உலகக் கோப்பையை வென்றோம்” அப்படியிருக்க 2026-ல் இப்படியொரு முடிவு வரும் என தான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.
“இன்னும் இரண்டு ஆண்டுகள் அணியை முன்னோக்கி அழைத்துச் செல்லத் தயாராக இருந்தேன். 2028 ஒலிம்பிக்ஸ், அடுத்த டி20 உலகக் கோப்பை என பல இலக்குகளை மனதில் வைத்திருந்தேன்” என்றும் கூறினார்.

சூர்யகுமார் தலைமையில் இந்தியா 50 T20I போட்டிகளில் 42 வெற்றிகளைப் பெற்றதுடன், ஆசியக் கோப்பை மற்றும் 2026 டி20 உலகக் கோப்பையையும் வென்றது.
“இரண்டு ஆண்டுகளாக ஒரு தொடரைக்கூட இழக்கவில்லை. ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என “எல்லாம் நல்லாத்தானே போச்சு”... அப்படியிருக்க மாற்றம் ஏன்? என சற்று ஏமாற்றமாக இருந்தது" என்றார்.
தேர்வாளர்கள் அணித் தேர்வுக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு தன்னைத் தொடர்புகொண்டு, “இனி நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்ததாகவும் சூர்யகுமார் கூறினார். எனினும் இந்திய அணிக்குத் திரும்பும் நம்பிக்கையை தான் இழக்கவில்லை. “நான் இன்னும் விளையாடத் தயாராக இருக்கிறேன். தொடர்ந்து விளையாடுவேன். சரியான நேரம் வந்தால் அழையுங்கள்” என்ற அவரது வார்த்தைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.





















