``எனக்கு சரியான வீடு கூட இல்லை'' - கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா ...
கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சதீஷ் (வயது: 36). இவரது தாயார் வீரம்மாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இது தொடர்பாக, தனது தாய் இறந்த நிலையில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலக சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இது குறித்து, மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு (வயது: 46) என்பவரிடம் சதீஷ் பலமுறை கேட்டும், அவர் இழுத்தடித்து வாரிசு சான்றிதழ் வழங்காமல் இருந்து வந்துள்ளார்.

சதீஷ் காரணம் கேட்டபோது, சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.3000 லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் வழங்கப்படும் என நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சதீஷ் இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய மூவாயிரம் ரூபாய் நோட்டுகளை சதீஷிடம் கொடுத்தனர். அதை அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் சதீஷ் வழங்கினார்.
அப்போது, மூவாயிரம் ரூபாய் லஞ்சம் பெறும் தருணத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பிரபுவை கையும் களவுமாக பிடித்தனர்.
வாரிசு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஒருவர் ரூ.3000 லஞ்சம் கேட்டு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















