Zoho: ``நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' - கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்ப...
காஞ்சிபுரம்: குப்பைக் கிடங்காக மாறிய பஞ்சுப்பேட்டை சாலை; கண்டுகொள்ளாத மாநகராட்சி
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
அச்சாலையின் அருகே குப்பைகள் அதிகம் வீசப்பட்டு அவ்விடம் குப்பைக் கிடங்கைப் போல் காட்சியளிக்கிறது.
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு சுத்தமாக இருந்த இடம் தற்போது குப்பை மேடாகவே மாறிவிட்டது.
அவ்வழியே செல்லும் மக்கள் எப்போதும் மூக்கை மூடிக்கொண்டு சென்ற நிலையிலேயே நடந்து செல்கின்றனர்.
அக்குப்பைக் கிடங்கின் அருகிலேயே கோவில், சிறப்புக் பராமரிப்பு மின் நிலையம், துணை மின் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார மையம் உள்ளன.

அவ்வலுவலக ஊழியர்கள், அவ்வலுவலகத்திற்குச் செல்லும் மக்கள், அவ்வழியே செல்லும் ஊர் மக்கள் என அனைவரும் கடக்க முடியாமல் அவ்விடத்தை மூக்கை மூடிக்கொண்டு கடந்து செல்கிறார்கள்.
கறிக்கடைகளில் மீர்ந்து போகும் கழிவுகளும் இங்கு கொட்டப்படுகின்றன. பஞ்சுப்பேட்டை மக்கள் மட்டும் இன்றி, சுற்று வட்டார மக்களும் வாகனங்களில் போகும்போது குப்பையை வீசிவிட்டு செல்கின்றனர் என அங்குள்ள மக்கள் கூறினர்.
இது மட்டும் இன்றி மழைக்காலங்களில் மழைநீருடன் அக்குப்பைகளும் சாலையில் மிதந்து பரவி கிடக்கும். அவ்விடத்தைக் கடக்கவே கடினமாக இருக்கும் எனவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதைப் பற்றி அங்குள்ள சுகாதார மையத்தில், ''அவ்விடத்தைச் சுத்தம் செய்ய மாட்டார்களா?'' என்று கேட்டபோது அதற்கு அவர்கள், ''மாதம் ஒருமுறை TPC(Municipality Workers) சுகாதாரத் தூய்மை பணியாளர்கள் வந்து சுத்தம் செய்துவிட்டு செல்வார்கள். இருந்தாலும் மறுபடியும் குப்பைகள் அதிகம் வீசப்பட்டு குப்பைக் கிடங்காக மாறிவிடும். இதனால் கொசுத்தொல்லை மற்றும் நோய் தொற்றுகள் வர வாய்ப்புள்ளது'' என கூறினார்கள்.






இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலிரிடம் கேட்டபோது, இதைத் தடுக்க ஒரு மதில் சுவர் கட்டப் போவதாகக் கூறினார்.
அவ்விடம் பார்ப்பதற்குச் சுகாதாரமின்மையின் உச்சமாகப் பிரதிபலிக்கிறது. அங்கு வீசும் துர்நாற்றமும், குப்பைகளை எரிக்கும்போது வரும் புகையால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையைச் சரிசெய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.











