``குஜராத்தில் இருந்து வந்தாலும் பருப்பு வேகாது; முதல் அடி நம்முடையது.!" - கோவையில் செந்தில் பாலாஜி
சட்டமன்ற தேர்தலுக்காக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “தேர்தலுக்கு இன்னும் 50 நாள்கள் தான் இருக்கின்றன.

ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும் கடினமாக உழைக்க வேண்டும். நமது திட்டங்களையும், சாதனைகளையும் வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் புள்ளி விபரங்களை ஆய்வு செய்யுங்கள்.

அதிமுக - பாஜக கூட்டணியாக பெற்ற வாக்குகள், தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்குகளை தெரிந்து கொண்டு பணியாற்றுங்கள். அப்போதுதான் நமக்கு எவ்வளவு வாக்குகள் தேவைப்படும் என அறிந்து செயல்பட உதவியாக இருக்கும்.
நம்முடைய வியூகம் என்ன என்று எதிரிகளுக்கு தெரியாத வகையில் பணியாற்ற வேண்டும். டெல்லியில் இருந்து வந்தாலும், குஜராத்தில் இருந்து வந்தாலும், சேலத்தில் இருந்து வந்தாலும், ஏன் எங்கிருந்து வந்தாலும் பருப்பு வேகாது.

தேர்தலில் முதல் அடி நம்முடையதாக இருக்க வேண்டும். திமுகவினர் தடுப்பு ஆட்டம் ஆடாமல் அடித்து ஆட வேண்டும். நாம தான் ஜெயிக்கிறோம். 50 நாள்களுக்கு பிறகும் நாம் தான் ஆட்சியில் இருப்போம்” என்றார்.










