சசிகலா: ''இனி பொறுமையாக இருக்க முடியாது!" - புதிய கட்சி தொடங்கிய சசிகலா!
சசிகலா: ''இனி பொறுமையாக இருக்க முடியாது!" - புதிய கட்சி தொடங்கிய சசிகலா!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால், அனைத்து கட்சியினரும் வேட்பாளர்கள் பட்டியல், வாக்குறுதிகள், கூட்டணி நிலைப்பாடு என பரபரப்பான தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டனர்.
சமீப நாட்களாக, சசிகலா புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவிருப்பதாகப் பேசப்பட்டு வந்தது.
இன்றுகூட 'புதிய கட்சியைத் தொடங்குகிறீர்களா?' எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'இன்று நல்ல செய்தி வரும்' எனப் பதிலளித்திருந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ராமநாதபுரத்திலுள்ள கமுதியில் சசிகலா தலைமையில் மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் அவர் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த மாநாட்டில், சசிகலா அவருடைய புதிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் கொடியில் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய கட்சி தொடங்குவது பற்றி இந்த மாநாட்டில் சசிகலா, "அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியைத் தொடங்குகிறேன்.
9 ஆண்டுகள் பொறுமையாக இருந்ததுபோல், இனி என்னால் இருக்க முடியாது. நான் பார்த்து பதவியில் உட்கார வைத்தவர்கள், அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஈட்டியால் முதுகில் குத்தினார்கள்.
என் கணவரை பார்க்க பரோல் கேட்ட போது, தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை. 5 நாளுக்கு மேல் எனக்கு பரோல் தரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சொன்னார்.
கட்சி என்னவானாலும் பரவாயில்லை என தன்னை பற்றி மட்டுமே நினைத்தார் எடப்பாடி பழனிசாமி" எனக் கூறியிருக்கிறார். கட்சியின் பெயரை கூடிய விரைவில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.













