மகனுக்காக எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க நிதின் கட்கரி முயற்சி? 4 யூடியூப்பர்கள் ...
சபரி வர்மன் லாக்கப் மரணம்: 'மனைவிக்கு அரசு வேலை வழங்க உறுதி' - கடைசிவரை போராடிய திமுக எம்.எல்.ஏ
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34) சிறையில் அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர் சிவகுமார் , தலைமை சிறை காவலர் திருமலை நம்பி ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருந்த சபரி வர்மன் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை கைதியாக நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
12-ம் தேதி இரவு சிறையில் சபரி வர்மனை சிறை வார்டன் உள்ளிட்டோர் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். ஜூலை 13-ம் தேதி அதிகாலையில் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் தேதி சிறையில் பார்த்தபோது நன்றாகயிருந்த சபரி வர்மன் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் 13-ம் தேதியே உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் 13-ம் தேதி பிரேதப் பரிசோதனை நடத்தவில்லை. 14-ம் தேதியான நேற்று உறவினர்கள் உடலை வாங்கமாட்டோம் எனப் போராட்டம் நடத்திய நிலையில் நாகர்கோவில் தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஆஸ்டின், நாகர்கோவில் மேயர் (பொறுப்பு) மேரிபிரின்ஸிலதா, வழக்கறிஞர்கள் லீனஸ்ராஜ், சரவணன் உள்ளிட்டோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், பிரேதப் பரிசோதனை முடியும் வரை சபரி வர்மனின் உறவினர்களுடன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஸ்டின் எம்.எல்.ஏ உள்ளிட்ட தி.மு.க-வினர் இருந்தனர்.
சபரி வர்மனின் உறவினர்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்ததால் நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. மேலும், சபரிவர்மனின் உடலில் 19 காயங்கள் இருப்பதும், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட உண்மையும் வெளிவர காரணமாக அமைந்தது.
இதுபற்றி ஆஸ்டின் எம்.எல்.ஏ கூறுகையில், "நாகர்கோவில் சப்-ஜெயிலில் வைத்து அங்கு உள்ளவர்களால் தாக்கப்பட்டு, இறந்துள்ளார். சபரி வர்மனின் மரணத்திற்கு நீதி வேண்டும், நியாயம் வேண்டும் என அவரது மனைவி, சகோதரி, தாய் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.
சட்டரீதியான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, சபரி வர்மன் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வைத்தார்கள். அதுபோக இந்தக் குடும்பத்திற்கான இழப்பீடு தொகையை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும், அவருடைய மனைவிக்கு கல்விக்குத் தகுந்த வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, நாங்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பேசியிருக்கின்றோம். முதல்வர் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துவிட்டதாகவும், இழப்பீடு கொடுப்பதற்கு அரசு ஒத்துக்கொண்டதாகவும், எவ்வளவு இழப்பீடு கொடுப்பது என்பதை முதலமைச்சரோடு பேசி முடிவு செய்து சொல்வோம் என்று கலெக்டர் தரப்பில் சொல்லியிருக்கின்றார்கள்.
ஏதாவது ஒரு அலுவலகத்துல தற்காலிக அரசு வேலையை உடனடியாகப் பூர்த்தி செய்து தருவதாக கலெக்டர் தரப்பில் சொல்லியிருக்கின்றார். ஒரு மாதம், இரண்டு மாதத்திற்குள்ளாக சத்துணவு, அங்கன்வாடி பணிகளுக்காக ஆள் எடுக்கப் போகிறார்கள்.
அதில், நிரந்தர வேலையை உடனடியாகக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உத்தரவாதம் வழங்கியிருக்கிறார். சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், அரசு வேலை, இழப்பீடு தருவதற்கும் அரசு ஒத்துக்கொண்டதை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். சபரி வர்மன் குடும்பத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பின் துணையாக நிற்கும்" என்றார்.
















