மகாராஷ்டிரா: பாஜக கூட்டணியில் சேரும் சரத்பவார்?முதல்வருடன் தேசியவாத காங்கிரஸ் தல...
லாக்கப் மரணம்: 'தலையில் ரத்தக்கட்டு, கழுத்தில் காயம்' - கடும் தாக்குதலால் கொல்லப்பட்ட சபரி வர்மன்
நாகர்கோவில் கிளைச் சிறையில் சபரிவர்மன் (34) என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டது.
மேலும், சிறப்பு மருத்துவக் குழு மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரேதப் பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும், சபரி வர்மனின் உடலை உறவினர்கள் பார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரம்ப உடற்கூறு ஆய்வு அறிக்கையில் மொத்தம் 19 காயங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் வலது முழங்கை, முன் கை மற்றும் தோள்ப் பகுதியில் பல சிராய்ப்புக் காயங்கள் உள்ளன. வலது கையின் நடுப்பகுதியில் பெரிய ரத்தக்கட்டு உள்ளது. வலது கையின் இரண்டாவது மெட்டாகார்பல் எலும்பு முறிவு கண்டறியப்பட்டது. கையின் உள்ளங்கை திசுக்களில் ரத்தக்கசிவு பதிவாகியுள்ளது.
வலது முன்கை மற்றும் வலது காலில் கட்டுப்படுத்தப்பட்டதைக் குறிக்கும் சிவப்பு தடயங்கள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடது முழங்கை, இடது கை, இடது கால் மற்றும் மார்புப் பகுதியில் சிராய்ப்பு மற்றும் ரத்தக்கட்டு காயங்கள் பதிவாகியுள்ளன.

அனைத்து காயங்களும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தலைப்பகுதியின் நடுவில் சுமார் 4 × 2 செ.மீ. அளவிலான ரத்தக்கட்டு, கழுத்தின் பின்புறத்தில் 3 × 1 செ.மீ. அளவிலான காயம் கண்டறியப்பட்டுள்ளன.
சில வெளிக்காயங்களுக்கு அடியில் உள்ள தோலடி திசுக்களிலும் ரத்தக்கட்டு இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காயங்களின் தன்மை குறித்து தடயவியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இருப்பினும், ரசாயன பரிசோதனை, திசு ஆய்வு உள்ளிட்ட ஆய்வுகள் நிறைவடைந்த பின்னரே இறுதியான மரணக் காரணம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சபரி வர்மனைக் கடுமையாகத் தாக்கி, கட்டிப்போட்டதாகவும், தீவிர உள்காயம் காரணமாகவும் அவர் சரிந்துவிழுந்து மரணமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சபரி வர்மனின் மனைவி ஆனந்தவல்லி கொடுத்த புகாரின் அடிப்படையில் நேசமணி நகர் போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சபரி வர்மன் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
அதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றினர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர் சிவகுமார், தலைமை சிறை காவலர் சுரேஷ் என்ற திருமலை நம்பி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

















