சிவசேனா: "பால் தாக்கரேவுக்கு இருந்த செல்வாக்கு தாக்கரே சகோதரர்களுக்கு இல்லை" - ப...
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 31.37 ஏக்கர் நிலம் மீட்பு; முடிவுக்கு வந்த 35 வருட போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.
நாடு முழுவதும் அறியப்பட்ட இப்பல்கலைகழகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தை ஒட்டியிருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 31.37 ஏக்கர் நிலம் திறந்தவெளி சிறைச்சாலை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது.

இந்த நிலத்தை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வந்ததாக புகார் எழுந்தது. பல ஆண்டுகளாக 31.37 ஏக்கர் நிலத்தை தங்கள் பயன்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் விமர்சனம் எழுந்தது. நிலத்தை மீட்பதற்காகப் போராடி வந்த சமூக ஆர்வலர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபர் வழக்குகளும் தொடர்ந்திருந்தனர்.
மேலும், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் நிலத்தைக் காலி செய்யும்படி 2022 ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்த 31.37 ஏக்கர் நிலத்தை 4 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் என்றும், உத்தரவை நிறைவேற்றியது குறித்து பிப்ரவரி 18ம் தேதி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதன்படி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று சென்றதுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, மீட்கப்பட்ட நிலத்தை சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இது அரசு நிலம் என்பதால், இப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புப் பலகையும் அதிகாரிகள் வைத்தனர்.
பின்னர், மீட்கப்பட்ட இடத்தில் திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பது தொடர்பாக சிறைத் துறை அலுவலர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையடுத்து கட்டடத்தில் இருந்த பொருள்களை சாஸ்த்ரா நிர்வாகம் எடுத்து காலி செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, இந்த இடத்திற்குப் பதிலாக மாற்று இடம் தருகிறோம் எனவும் சாஸ்த்ரா தரப்பில் சொல்லி வந்ததாகவும் அது எடுபடவில்லை என்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி இருக்கும் என நிலத்தை மீட்பதற்குச் செயல்பட்டு வந்த குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சாஸ்த்ரா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.















