NRI-களே... ரியல் எஸ்டேட் போதுமென்று நினைத்து, இனியும் இதை மிஸ் பண்ணாதீங்க!
ஜனநாயகன்: ரிலீஸ் அறிவித்த 9-ம் தேதியன்று தீர்ப்பு - நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன? | முழு தகவல்
அ.வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
படத்துக்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களைச் செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை.
படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது.

புகார் ஏற்கத்தக்கது தானா?
இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி, ``படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்?" என சென்சார் போர்டு தரப்புக்கு சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ``ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால், அவர் ஒரு திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறு ஆய்வுக்குழுவிற்கு படத்தை அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், பாதுகாப்புப் படைகள் தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு முடிவல்ல
``சான்றிதழ் வழங்கும் முன்போ, மறுக்கும் முன்போ மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது. அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே நடந்துள்ளது. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜனவரி 5 ம் தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்சார் போர்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை" எனவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது.
``மறு ஆய்வுக்கு அனுப்பிய முடிவு மத்திய அரசு முடிவல்ல. சென்சார் போர்டு தலைவருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. அனைத்தும் சென்சார் சான்றிதழ் வழங்கும் வரை மறுஆய்வு செய்ய தணிக்கை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் அரசால் அதை மறுஆய்வு செய்ய முடியாது" எனவும் வாதிடப்பட்டது.

என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை!
பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ``படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒரு மனதாக சான்று வழங்க முடிவு செய்தனர்.
படத்தைப் பார்த்த சென்சார் போர்டு குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது. படத்தைப் பார்த்த உறுப்பினர், பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். உறுப்பினர் இப்போது புகார்தாரராகியுள்ளார். என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை!" என வாதிடப்பட்டது.
``சென்சார் போர்டு தனது முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது எனக் கூற முடியும்" எனவும் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்?
``புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் என்பது இன்று தான் தெரியவந்தது. ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்" என, படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும் எனவும் வாதிடப்பட்டது.

தீர்ப்பு 9-ம் தேதிக்கு மாற்றம்
இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தள்ளிவைப்பதாக நீதிபதி தெரிவித்தபோது, படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் ஜனவரி 9 ம் தேதி தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக, நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்துள்ளார்.
















