'பராசக்திக்கு U/A சான்றிதழ்!' - திட்டமிட்டப்படி நாளை ரிலீஸ்!
சோதனையின்போது உள்ளே நுழைந்த மம்தா; ஆவணங்களைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டும் ED - நடந்தது என்ன?
அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிருக்கின்றனர்.
‘ஐ-பேக்’ நிறுவனத்தின் இயக்குநரான பிரதிக் ஜெயின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் தான் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறது.

ஆவணங்களைக் கைப்பற்றிய மம்தா?
இந்த சோதனையின் போது தர்ணாவில் ஈடுபட்டிருந்த மம்தா பானர்ஜி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போதே பிரதிக் ஜெயினின் வீட்டுக்குச் சென்று சில ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி, ‘‘அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது.
அவர்கள் எங்கள் கட்சியின் ஆவணங்களையும் சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் கொண்ட ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர்.
நான் அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தேன். அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா?
இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. உள்துறை அமைச்சர் நாட்டை பாதுகாப்பவரைப் போல அல்லாமல், மிகவும் மோசமான அமைச்சரைப் போல நடந்து கொள்கிறார்’’ என கண்டனம் தெரிவித்திருந்தார்.

குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை
இந்நிலையில் தங்களிடம் இருந்து ஆவணங்களை பறித்து சென்றதாக மம்தா பானர்ஜி மீது அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
அமலாக்கத்துறை வெளியிட்டிற்கும் அறிக்கையில், "மேற்கு வாங்க முதல்வர் வரும் வரை சோதனை அமைதியாக தான் நடந்தது.
மம்தா பானர்ஜி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சோதனை நடந்த பிரதீக் ஜெயின் வீட்டிற்கு வந்து ஆவணங்கள் மற்றும் மின்னனு சாதனங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை பறித்து சென்றுவிட்டனர்.
தடையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி
அதன் பிறகு மம்தா பானர்ஜியின் கான்வாய் ஐபேக் அலுவலக பகுதிக்கு சென்றது. அங்கு நடந்த சோதனையின்போதும் அவருடன் சென்ற போலீஸ் அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் மின்னனு சாதணங்களை வலுக்கட்டாயமாக பறித்திருக்கின்றனர்.

இது அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு தடையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சோதனை எந்த அரசியல் கட்சியையும் இலக்காகக்கொண்டு நடக்கவில்லை.
தேர்தல் தொடர்பாக சோதனை நடக்கவில்லை" என்று மம்தா பானர்ஜி மீது அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டியிருக்கிறது.

















