ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
விஜய்: தணிக்கைச் சான்றிதழ் தாமதம் முதல் மேல்முறையீடு வரை! 'ஜனநாயகன்' கடந்து வந்தப் பாதை
அ.வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் படம் 'ஜனநாயகன்'.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுப்பு
படத்துக்கான அனைத்துப் பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காகப் படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களைச் செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை.
படம் வெளியாக ஓரிரு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது.
படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்?
இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் (ஜனவரி. 7) நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி பி.டி ஆஷா, "படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்?

9-ம் தேதி தீர்ப்பு
புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் என்பது இன்று தான் தெரியவந்தது. ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கும் நிலையில் படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
படத்தைத் தள்ளிவைத்த தயாரிப்பு நிறுவனம்
படம் வெளியாகும் அன்று (ஜனவரி.9) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "எங்கள் அன்பார்ந்த பங்குதாரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தச் செய்தியை மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு, எங்களால் கட்டுப்படுத்த முடியாத தவிர்க்க முடியாத சூழல்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம்.
இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதானதல்ல. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
உங்களது அசைக்க முடியாத ஆதரவே 'ஜனநாயகன்' குழுவினருக்கு மிகப்பெரிய பலமாகவும், எல்லாவற்றுக்கும் மேலானதாகவும் இருக்கிறது" என்று தெரிவித்திருந்தது.
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்
தணிக்கை சான்றிதழ் வழங்காமல் படம் தாமதம் ஆன நிலையில் இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல் என்று பலரும் விமர்சனம் செய்திருந்தனர். விஜய்க்கு ஆதரவாக அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் குரல் கொடுத்தனர்.

குறிப்பாக 'விஜய்யின் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாக்கூர், எம். பி ஜோதிமணி, நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், போன்றோர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தனர்.
அதேபோல சினிமாவில் ரவி மோகன், சிம்பு, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்ட பலர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தனர்.
U/ A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்
இந்நிலையில் இன்று (ஜனவரி.9) 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு U/ A சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையும் ரத்து செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் படம் ஜனவரி 11, 12 தேதிகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம்
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்போது சிக்கல் நீடிக்கிறது என்றே சொல்ல முடியும்!















