குருப்பெயர்ச்சி 2026 : `எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு; கவனம் தேவை' - மே...
டான் 3: திடீரென வெளியேறிய ரன்வீர் சிங்; ரூ.45 கோடி கேட்கும் தயாரிப்பாளர்! - தொழிற்சங்கம் வைத்த செக்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் டான் 3 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதையடுத்து டான் 3 படத்தயாரிப்பு குழு படத்தயாரிப்புக்கு தேவையான வேலைகளில் இயக்குனர் பர்ஹான் அக்தர் ஈடுபட்டிருந்தார். ஆனால் திடீரென டான் 3 படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் ரன்வீர் சிங் அறிவித்துள்ளார். இதனால் தனக்கு பெரிய அளவில் இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக இயக்குனர் பர்ஹான் அக்தர் தெரிவித்துள்ளார்.
அதோடு இதற்காக ரன்வீர் சிங் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பர்ஹான் அக்தர் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் நடிகர் ஆமீர் கான் உட்பட முன்னணி நடிகர்கள் சமரசப்பேச்சுவார்த்தை நடத்திப்பார்த்தனர். ஆனால் இதில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
தற்போது ரன்வீர் சிங் மூலம் தனக்கு 45 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனை ஈடுகட்ட ரன்வீர் சிங் 45 கோடி கொடுக்க வேண்டும் என்று பர்ஹான் அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார். பர்ஹான் அக்தரின் இக்கோரிக்கையை ரன்வீர் சிங் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதனால் ரன்வீர் சிங் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கப்போவதில்லை என்று திரைப்பட ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேற்கிந்திய திரைப்பட ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பிரேந்திர திவாரி மற்றும் தலைமை ஆலோசகர் அசோக் பண்டிட் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில், ``டான் 3 படப்பிடிப்பு தொடங்குவதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பே ரன்வீர் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், பர்ஹானின் தயாரிப்பு நிறுவனமானம் ரன்வீர் சிங்கிடமிருந்து இழப்பீடாக 45 கோடி ரூபாயைக் கோரியுள்ளதையும் அசோக் பண்டிட் உறுதிப்படுத்தினார்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு, ரன்வீர் சிங் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாகக் குற்றம் சாட்டி, பர்ஹான் அக்தர் தங்களது அமைப்பில் புகார் ஒன்றை அளித்திருந்ததாக அசோக் பண்டிட் தெரிவித்தார். பர்ஹான் லண்டனில் இருந்ததால் 'Zoom' செயலி வாயிலாக எங்களைத் தொடர்புகொண்டார். அதேவேளையில், தயாரிப்பாளர் ரிதேஷ் சித்வானி நேரடியாக எங்களதுஅலுவலகத்திற்கே வந்து புகார் செய்துள்ளார்
நாங்கள் மறுதரப்பினரை (ரன்வீர் சிங்கை) அணுகினோம். எங்களை நேரில் சந்தித்து, தனது தரப்பு விளக்கத்தையும் அளிக்குமாறு நாங்கள் அவருக்கு (ரன்வீர் சிங்கிற்கு) ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை என மூன்று முறை நினைவூட்டினோம். இருப்பினும், அவரிடமிருந்து எங்களுக்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை. இந்த முழுப் பிரச்சினையும் எங்கள் கூட்டமைப்பின் அதிகார வரம்பிற்குள் வராது' என்று குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் எங்களுக்கு வந்தது. அந்த மின்னஞ்சலில், 'இந்த விவகாரத்தில் உங்கள் அமைப்பு தலையிட வேண்டிய அவசியமே இல்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது," என்று அசோக் பண்டிட் கூறினார்.
திரைப்படத் திட்டங்களில் ஏற்படும் திடீரென விலகுவது, அத்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன. விதிமுறைகளை விட எந்தவொரு 'சூப்பர் ஸ்டாரும்' பெரியவர் அல்ல. எனவே, இன்றிலிருந்தே ரன்வீர் மீது 'ஒத்துழையாமை' உத்தரவு ஒன்றை நாங்கள் பிறப்பித்துள்ளோம். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு, ரன்வீர் சிங் எங்களை நேரில் சந்திக்கும் வரை, இந்த உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பதை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மற்றும் சங்கங்களுக்கும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்''என்று அவர் கூறினார்.

ரன்வீர் சிங்கின் செய்தித்தொடர்பாளர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில்,''திரையுலகின் மீதும், 'டான் படக்குழுவுடனும், அதோடு தொடர்புடைய அனைவர் மீதும் ரன்வீர் சிங் மிகுந்த மரியாதை கொண்டுள்ளார். 'Don 3' திரைப்படம் தொடர்பாக அண்மையில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்திலும், அவர் வேண்டுமென்றே மௌனம் காக்க முடிவு செய்துள்ளார். ஏனெனில், தொழில்முறை சார்ந்த பேச்சுவார்த்தைகளையும், தனிப்பட்ட உறவுகளையும் கண்ணியம், முதிர்ச்சி மற்றும் பரஸ்பர மரியாதையுடன் கையாள்வதே சிறந்தது என்று அவர் உறுதியாக நம்புகிறார். பல்வேறு கதைகளும் யூகங்களும் பரவி வருவதாகவும், ஆனால் ரன்வீர் பொதுவெளியில் பதிலளிப்பதையோ அல்லது யூகங்களுக்கு வழிவகுப்பதையோ ஒருபோதும் அவசியமாகக் கருதவில்லை" என்றும் தெரிவித்தனர்.



















