PBKS vs LSG: `தேன் கூட்டில் கை வைத்த ரிஷப் பன்ட்' - அடித்து ஆடிய பஞ்சாப்; அடி வா...
"தமிழ்நாட்டின் மிரட்டல் எப்படி இருக்கும் என்பதை பாராளுமன்றத்தில் காட்டியிருக்கிறோம்" – கமல்ஹாசன்
கோவை தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "இந்தத் தொகுதியில் நான் நடந்து செல்லாத வீதிகளே இல்லை. செந்தில் பாலாஜி என்னிடம் இது உங்கள் தொகுதி என்று பெருந்தன்மையாகக் கூறியபோது, நான் இது நம் தொகுதி என்று கூறினேன். ஒரு பைசா கூட வாங்காமல் 51,481 ஓட்டு எனக்காகச் செலுத்தினார்கள் என் மக்கள்.
அந்த ஓட்டுக்கள் அனைத்தும் தற்போது செந்தில் பாலாஜிக்கு விழும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எனக்கு கிடைத்த அத்தனை ஓட்டுகளும், என் மீது என் மக்கள் வைத்திருக்கும் அன்பினால் கிடைத்த ஓட்டுக்கள். இப்போது நான் அன்பு வேண்டுகோள் விடும்போது, என் மக்கள் நிச்சயமாக அதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
எனது நாடாளுமன்ற நிதியிலிருந்து ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் ஒதுக்கி, உலக தரத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எப்படி தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை உலக அளவில் ஒளிர, மிளிரச் செய்தாரோ, அதேபோல கோவையில் இருந்தும் உலக அளவில் நீச்சல் போட்டியில் நம் மண்ணின் வீரர்கள் வெற்றி பெறுவதற்கு இந்த நீச்சல் குளம் என்னுடைய சிறிய விதை, அதை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும்.

தி.மு.க-வை ஒழிப்பேன் என்று சொல்பவர்கள் அனைவரும் பின்னணிலும் ஒரே ஒரு தலைவர்தான் இருக்கிறார், அவர் வடக்கில் இருக்கிறார்.
எனக்கு இவர்களையெல்லாம் பார்க்கும் போது, ஃபேன்சி டிரஸ் போட்டி பார்ப்பது போல் உள்ளது. ஒருவர் வேறு வேறு வேடங்களில் வந்தாலும், அவர்களின் திட்டங்கள் எல்லாம் இந்த மக்கள் மத்தியில் பலிக்காது.
கோவைக்கு ஏன் மெட்ரோ ரயில் விடவில்லை எனக் கேள்வி கேட்கும் புத்தி மக்களுக்கு இருக்கிறது. மான்செஸ்டர் என்று சொல்லப்படும் கோவையில் மெட்ரோ கொண்டு வர போதிய மக்கள்தொகை இல்லை என்பவர்களுக்கு, ஆக்ரா, பாட்னா போன்ற நகரங்களில் மட்டும் எப்படி விதிகளை எல்லாம் தளர்த்தி கொண்டார்கள்?
நான் இளைஞனாக இருக்கும் போதிருந்து பேசப்படும் விமான நிலையம் விரிவாக்கத்தை, இன்று வரையிலும் மத்திய அரசு செய்யவில்லை.

செந்தில் பாலாஜி ஏற்கனவே மாநகராட்சியின் நூறு வார்டுகளில் 96 வார்டுகளை வென்று காட்டியவர். அந்தச் சரித்திரத்தை மாறாது, மீண்டும் நிகழ்த்தி காட்ட முடியும். 15 கட்சிகளை ஒன்றாகத் திரட்டிய நம் முதல்வர், அவருக்குக் கொடுத்திருக்கும் அசைன்மென்ட் இது. அரசியல் சரித்திரத்தில் புதிய மாற்றத்தை கோவை உருவாக்கப் போகிறது. தி.மு.க. கோட்டையாக மாறப்போகிறது.
ஏற்கனவே இங்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள், தற்போது வேறு பகுதிக்குச் சென்றதே இவர் பெறப் போகவிருக்கும் வெற்றிக்குச் சாட்சி. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பது கோவைக்கு உரிய பழமொழி. இங்கு செழிக்கப் போகிறது என்பது உங்களின் கண்களில் தெரிகிறது.
தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி என்ற பெயரில் பிளாக்மெயில் செய்கிறார்கள். இந்த பிளாக்மெயில் எல்லாம் இங்கு செல்லாது. தமிழ்நாட்டின் மிரட்டல் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் பாராளுமன்றத்தில் செய்து காட்டியிருக்கிறோம்.
தற்போது 543 பாராளுமன்றத் தொகுதிகளில் மகளிருக்கு 33 சதவீதம் கொண்டு வர வேண்டியது என்னுடைய போராட்டம். செந்தில் பாலாஜியின் போராட்டம் கோவை மக்களுக்காக இங்கு இருக்கும். சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் ஏப்ரல் 23ஆம் தேதி செய்து காட்ட வேண்டும்" என்றார்.



















