`18 வயதில் கல்லூரி பேராசிரியர்'- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! - யார் ...
தின SIP, வார SIP, மாத SIP... எப்படி முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
மியூச்சுவல் ஃபண்டில் SIP மூலம் முதலீடு செய்கிறவர்கள் இன்றைக்கு ஏராளம் பேர். இந்தியா முழுக்க சுமார் 6 கோடி பேர் மாதந்தோறும் ரூ.32,000 கோடியை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறார்கள். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்கிறவர்கள் பலர்.
எஸ்.ஐ.பி முறையில் புதிதாக முதலீடு செய்ய வருகிறவர்கள் மாதந்தோறும் எவ்வளவு முதலீடு செய்யலாம், எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும், எத்தனை ஆண்டுகளில் முதலீடு செய்தால் எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கும் என்பதை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டபின், தவறாமல் கேட்கும் ஒரு கேள்வி:
எஸ்.ஐ.பி மூலம் மாதத்தின் எந்தத் தேதியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதுதான். அல்லது, தின SIP, வார SIP, மாத SIP - இதில் எதைத் தேர்வு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதுதான். இந்தக் கேள்விக்கான பதில் என்ன?
வொயிட் ஓக் (White Oak) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்கிறது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கான பி.எஸ்.இ சென்செக்ஸ் டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸ் (BSE Sensex Total Return Index) தரவுகளை ஆராய்ந்து பார்த்தபின், தின SIP, வார SIP, மாத SIP - இதில் எதைத் தேர்வு செய்தால், அதிக லாபம் கிடைத்திருக்கிறது என்பதை சொல்லி இருக்கிறது.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் செய்துள்ள ஆய்வின்படி, ஒருவர் 1996-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஜுன் 2026-ஆம் ஆண்டு வரை தினமும் ரூ.1000, வாரந்தோறும் ரூ.6,997, மாதந்தோறும் ரூ.30,384 வீதம் முதலீடு செய்திருந்தால், எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பதை வொயிட் ஓக் நிறுவனம் சொல்லி இருக்கிறது.
தின SIP மூலம் ரூ.1000, வார SIP மூலம் ரூ.6,997 ஒருவர் 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்திருந்தால், அவர் மொத்தம் ரூ.109.08 கோடியை முதலீடு செய்திருப்பார். இதற்கு 13.47% லாபம் கிடைத்திருக்கும். அதாவது, அவருக்கு ரூ.12.33 கோடி கிடைக்கும்.
மாத SIP மூலம் அவர் ரூ.30,384 முதலீடு செய்திருந்தால், முதலும் லாபமுமாக சேர்ந்து அவருக்கு ரூ.12.45 கோடி திரும்பக் கிடைக்கும். ஆக, வித்தியாசம் என்பது வெறும் ரூ.12 லட்சம் மட்டுமே!

இந்த ஆய்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னவெனில், எஸ்.ஐ.பி முறையின் நீண்ட கால நோக்கில் நாம் முதலீடு செய்வதுதான் முக்கியமே தவிர, எந்தத் தேதியில் நாம் முதலீடு செய்கிறோம் என்பது முக்கியமல்ல.
ஒருவர் 25 வயதில் முதல் வேலைக்குச் சேர்ந்த உடனே எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்ய ஆரம்பித்துவிடுவது கட்டாயத்திலும் கட்டாயம்! 25 வயதில் ஒருவர் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கினால், அடுத்த 35 ஆண்டுகளுக்கு அதாவது, அவருடைய 60-வது வயது வரை முதலீடு செய்ய முடியும். ஆனால், ஒருவர் 41-வது வயதில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கினால், 20 ஆண்டுகளுக்கு மட்டுமே அந்த முதலீட்டை செய்ய முடியும்.
அதே போல, எவ்வளவு தொகையை எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்கிறோம் என்பதைவிட, எத்தனை ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். அந்த வகையில் ஒரு வயது குழந்தைக்காக மாதந்தோறும் ரூ.500 அல்லது ரூ.1000 என்கிற கணக்கில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கினால், அந்தக் குழந்தைக்கு 20 வயதாகும்போது கணிசமான பணம் சேர்ந்திருக்கும். அந்தக் குழந்தையின் படிப்புக்கு, திருமணத்திற்கு அல்லது ஓய்வுக் காலத்துக்கு என எதற்கு வேண்டுமானாலும் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்!



















