பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, பாரதியார் இல்லம், மணப்பாடு கடற்கரை- தூத்துக்குடி முக்க...
திருவள்ளூர்: குடிக்கத் தண்ணீர் கேட்ட வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை - மூவரிடம் போலீஸ் விசாரணை!
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பகுதியில் உள்ள ராமராஜன் கண்டிகை கிராமத்தில் பெண் ஒருவர் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் வீட்டின் வெளிபக்க இரும்பு கேட்டை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தட்டியிருக்கிறார். அதனால் வெளியில் வந்து பார்த்த பெண், என்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு இளைஞர், பேசியது அந்தப் பெண்ணுக்கு புரியவில்லை. மேலும் இளைஞரின் கையில் கத்தியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த பெண், உடனடியாக தன்னுடைய உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததோடு வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கிறார். ஆனால் அந்த இளைஞரோ இரும்பு கேட்டை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்.

இந்தச் சமயத்தில் பெண்ணின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள், வடமாநில இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது சிலர் வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். இதில் வடமாநில இளைஞர், மயங்கி விழுந்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதைத் தொடர்ந்து வெங்கல் காவல் நிலையத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வடமாநில இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து வடமாநில இளைஞரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீஸார், கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்டமாக பெண்ணின் உறவினர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து வெங்கல் போலீஸார் கூறுகையில், ``புலம் பெயர்ந்த வடமாநில இளைஞரின் பெயர் பிரசங்கிதாஸ் (35). இவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். வேலைத் தேடி அவர் இங்கு வந்திருக்கிறார். அப்போது அவர் தண்ணீர் கேட்டு அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மொழி தெரியாததால் இந்த அசம்பாவித சம்பவம் நடந்திருக்கிறது. தொடர்ந்து வடமாநில இளைஞரின் கொலைக்கு காரணமானவர்களிடம் விசாரித்து வருகிறோம்'' என்றனர்.





















