அஜித் பவார்: இளம் பெண் பைலட் சாம்பவி பதக் டு கேப்டன் சுமித் கபூர்! - விமானிகளின்...
திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்.. அச்சத்தில் மக்கள்!
திருவாரூர் மாவட்டம், கூடுர் ஊராட்சிக்கு உட்பட்ட முசக்குளம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி மையம் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது. இது குறித்து முசக்குளம் கிராமத்தினர் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முசக்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் பேசினோம்.
முசக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முக கார்த்தி நம்மிடம் பேசும்போது,
“இந்த ஊரின் சாலை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அங்கன்வாடி மையம் கட்டடம் என்று கிராமத்திற்கு முதன்மையான அடிப்படை வசதிகளே மோசமான நிலையில் தான் இருக்கிறது. அதிலும் மழைக்காலங்களில் எங்கள் நிலைமை இன்னும் மோசம் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகள் வீட்டிற்கு வந்து சேரும் வரை, ஒருவித பதற்றத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது.
எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும், மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தின் கட்டடமும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதில்தான், 15-க்கும் மேற்பட்ட சிறார்கள் தினமும் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே அங்கன்வாடி மையமும் செயல்படுவதால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நிகழலாம். பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தோம். அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டங்களில்தான் ஈடுபடுவோம்” என்கிறார் விரக்தியாக.
இதையடுத்து, கூடுர் ஊராட்சியின் அவல நிலை குறி்த்து திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு, "ஊராட்சி நிர்வாகம் சார்பாக மதிப்பீடு செய்து அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கீடு பெற்ற பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
விரைந்து மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை எற்படுத்தி தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.













