ISRO: இஸ்ரோவில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறும் விஞ்ஞானிகள்; காரணம் என்ன?!
தூத்துக்குடி: அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு - பெற்றோர் அதிர்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள ரகுராமபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு 20 குழந்தைகள் தினம் தோறும் வருவது வழக்கம். இங்கு சொர்ணமாரி என்பவர் ஊழியராகப் பணி செய்து வருகிறார். பொதுவாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாள்கள் முட்டை வழங்குவது வழக்கம். இதில், 1 வயதிலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று பச்சை மூட்டைகளை பெற்றோரிடம் வழங்குவதும் மற்ற குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் அவித்த முட்டையை உணவுடன் சேர்த்து வழங்குவதும் வழக்கம். இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி ஒரு வயது உடைய குழந்தையின் பெற்றோரிடம் அங்கன்வாடி ஊழியரான சொர்ணமாரி மூன்று முட்டைகளை வழங்கியுள்ளார்.

அந்த முட்டைகளில் ஒரு முட்டையை அந்தக் குழந்தையின் தாய் ஆம்லெட் போடுவதற்காக உடைத்துள்ளார். அதில், முட்டையில் கோழிகுஞ்சு ஒன்று இறந்து அழுகிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த அழுகிய முட்டையை, கையோடு அங்கன்வாடி மையத்திற்கு கொண்டு வந்து அங்கன்வாடி ஊழியரான சொர்ணமாரியிடம் காண்பித்தார். அதற்கு சொர்ணமாரி, ”இது எந்த முட்டையோ? எனக்குத் தெரியாது” என்று அலட்சியமாக பதில் கூறினாராம்.
இந்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், செய்தியாளர்கள் அங்கு சென்று செய்தி சேகரிக்கச் சென்றபோது, முதலில் `இந்த முட்டை நாங்கள் கொடுக்கவில்லை' என்று கூறிய சொர்ணமாரி, பின்பு `நாங்கள்தான் முட்டையைக் கொடுத்தோம்' என்று கூறினார். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, ”அங்கன்வாடி மையத்தை முறையாக பராமரிப்பது இல்லை. குழந்தைகளுக்கு எதுவும் சொல்லித்தருவதும் இல்லை. முறையான குடிநீர் வசதி இல்லை, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகின்றன. HCL நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட RO குடிநீர் இயந்திரமும் LED டி.வி-யும் பயன்படுத்தாமலே உள்ளன. சிறுவருக்கான விளையாட்டு உபகரணங்களும் பழுதாகி உள்ளன. கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் உள்ளது” எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இது குறித்து குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர் பத்மாவதியிடம் கேட்டபோது, ”அந்தப் பிரச்னைக்குரிய முட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் வந்தது. பெற்றோர்களிடம் திங்கள்கிழமைதான் மூன்று முட்டைகள் கொடுத்தோம். அதில் ஒரு முட்டையை உடைத்துப் பார்த்தபோது இறந்த கோழிக்குஞ்சு அழுகிய நிலையில் இருந்ததாக வந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறேன்” என்றார்.



















