எல்பிஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
``நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இல்லை'' - சிபிஐ அறிக்கை
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாலிவுட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்திற்கு போதைப்பொருள் பழக்கம் காரணம் என்றும், பில்லி சூனியம் காரணம் என்றும் பல்வேறு செய்திகள் வெளியானது.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலி ரியா சக்ரவர்த்திதான் காரணம் என்று சுஷாந்த் சிங் தந்தை குற்றம் சாட்டி இருந்தார்.
ரியா சக்ரவர்த்தியும் சுஷாந்த் சிங் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்திருந்தார். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பீகாரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட்து.
இத்தற்கொலையை தொடர்ந்து ரியா சக்ரவர்த்தியும், அவரது சகோதரர் செளவிக் சக்ரவர்த்தியும் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

சி.பி.ஐ 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவ்வழக்கை தனது கையில் எடுத்து விசாரிக்க ஆரம்பித்தது. சுஷாந்த் சிங்கிடம் ரியா சக்ரவதியும், அவரது குடும்பத்தினரும் பணம் கேட்டு சித்ரவதை செய்ததாகவும், சுஷாந்த் சிங் தற்கொலையில் ரியா சக்ரவர்த்திக்கு முக்கிய பங்கு இருப்பதாக சுஷாந்த் சிங் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்திருந்தனர்.
இவ்வழக்கு விசாரணையின் போது ரியா சக்ரவர்த்தி உள்பட 20-க்கும் அதிகமானோரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தியது. சுஷாந்த் சிங் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட லேப்டாப், ஹார்டு டிஸ்க், கேமரா, இரண்டு மொபைல் போன் போன்றவற்றை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

நான்கு ஆண்டுகளாக நடந்த விசாரணை இப்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி முடிவு அறிக்கையில், சுஷாந்த் சிங் ரஜபுத் தற்கொலை தான் செய்து கொண்டார் என்றும், அவரை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு இத்தற்கொலையில் ரியா சக்ரவர்த்தி அல்லது அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இல்லை என்றும் சி.பி.ஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சுஷாந்த் சிங் வீட்டில் எடுக்கப்பட்ட பொருள்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில் இச்சம்பவம் கொலை கிடையாது என்றும், தற்கொலை என்றும் தெரிய வந்துள்ளது என்றும் சி.பி.ஐ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரியா சக்ரவர்த்தி சார்பாக கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் முழுமையாக விசாரித்ததற்காக தானும் நடிகரும் சிபிஐக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் வழக்கு தொடர்பாக தவறாக புனையப்பட்ட கதைகள் முற்றிலும் தேவையற்றவையாகும்.
கொரோனா காரணமாக நாட்டில் எதுவும் நடக்காத நிலையில் அனைவரும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் மூழ்கி இருந்த நேரத்தில் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டு ஊடகங்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் முன் நிறுத்தப்பட்டனர். இது வேறு எந்த விஷயத்திலும் மீண்டும் நிகழக்கூடாது என்று நம்புகிறேன்.
ரியா சக்ரவர்த்தி சொல்லொணா துயரங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது, நீதிபதி சாரங் வி கோட்வால் அவரை ஜாமீனில் விடுவிக்கும் வரை எந்தத் தவறும் செய்யாமல் 27 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மிகவும் மனிதாபிமானமற்ற வகையில் நடத்தப்பட்டபோதிலும் ரியாவும், அவரது குடும்பத்தினரும் அமைதி காத்தனர். ரியாவும், எனது குழுவினரும் மிரட்டப்பட்டோம்''என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 2020-ம் ஆண்டு சி.பி.ஐ தேடுதல் நோட்டீஸ் வெளியிட்டு இருந்தது. அதனை எதிர்த்து ரியா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.பி.ஐ.யின் தேடுதல் நோட்டீஸை ரத்து செய்தனர். இதை அடுத்து சி.பி.ஐ மற்றும் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கவாய் மற்றும் விஷ்வநாதன் ஆகியோர் இம்மேல் முறையீட்டு மனு அற்பத்தனமானது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் முக்கியமானவர் என்ற ஒரே காரணத்திற்காக மேல் முறையீடு செய்யப்பட்டு இருப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தனர்.