தங்கம் வாங்குவதற்கு புது செக்: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு; 15% -...
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி? ஒரே நாளில் ரூ.100 கோடி சம்பாதித்த கும்பல்?
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததால் ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்தேர்வுக்காக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக படித்த மாணவர்கள் அடுத்து எப்போது இத்தேர்வு நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அதோடு தேர்வு முடிந்து விடுமுறையை அனுபவிக்க முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் எவ்வாறு கசிந்தது என்பது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வேதியியல் தாளில் வந்ததாக கூறப்படும் 120 கேள்விகளைக் கொண்ட உத்தேச கேள்வித்தாள் பட்டியல் மே 3ம் தேதி தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்டதாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நீட் தேர்வு வினாத்தாள் திருட்டில் மிகப்பெரிய பிரமிடு போன்ற ஒரு கும்பல் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை தொடர்பு கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் முதன் முதலில் வினாத்தாள் கிடைக்கும் நபர் 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை வாங்கிக்கொண்டு மொத்தத் தொகைக்கு 180 கேள்விகளின் தொகுப்பை விற்று இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கும் நபர் இரண்டாவது அடுக்கு பிராந்திய ஆபரேட்டர்களான பயிற்சி மையங்களின் உரிமையாளர்கள் அல்லது கோட்டா, சிகார் அல்லது பாட்னா போன்ற மையங்களில் விற்பனை செய்கின்றனர்.
தேர்வுக்கு சுமார் 48 முதல் 72 மணிநேரத்திற்கு முன்பு அவர்கள் ஒரு மாணவருக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வாங்கிக்கொண்டு பேப்பரை வழங்குகிறார்கள். இந்தக் கட்டணத்தில், பாதுகாப்பான தங்கும் இடமும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். தேர்வு வரை மாணவர்கள் அந்த வினாத்தாள்களை யாருக்கும் கொடுக்காமல் இருக்க அவர்கள் தனியாக வைத்து கண்காணிக்கப்படுவார்கள். அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை இருக்கும் புரோக்கர்கள், ஏஜெண்டுகள் என அனைவரும் சேர்ந்து ஒரு நாள் தேர்வில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக லாபம் பார்த்து இருப்பதாக அத்துறையோடு தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படி கசிந்தது?
நீட் தேர்வுக்கான வினாத்தாள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு அச்சகத்தில்தான் அச்சடிக்கப்பட்டது. அங்கிருந்துதான் வினாத்தாள் வெளியாகி இருக்கவேண்டும் என்று சி.பி.ஐ அதிகாரிகள் கருதுகின்றனர். அச்சகத்தோடு தொடர்புடைய நபர்தான் இந்த வினாத்தாளை மோசடிக் கும்பலிடம் கொடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அந்த வினாத்தாள் முதலில் குருகிராமில் உள்ள ஒரு டாக்டரிடம் கிடைத்துள்ளது. அந்த டாக்டர் ஜெய்ப்பூரின் ஜாம்வா ராம்கரைச் சேர்ந்த காடிக் என்ற நபரிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. நாசிக் அச்சகத்துடன் தொடர்புடைய நபரை சிபிஐ ஏற்கனவே கைது செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜாம்வா ராம்கரில் இருந்து, ராஜஸ்தானில் உள்ள சிகார் என்ற நகரை சேர்ந்த ராகேஷ் குமார் மாண்டவாரியா என்ற நபருக்கு அந்தத் தாள் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது. ராகேஷ் சிகாரில் உள்ள முக்கிய பயிற்சி நிறுவனங்களுக்கு வெளியே எம்பிபிஎஸ் ஆலோசனை முகவராக பணிபுரிகிறார். அவர் டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர், பீகார், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி மையங்களை தொடர்பு கொண்டு நாடு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் நெட்வொர்க் மூலம் நீட் தாள் பெரிய தொகைக்கு பகிர்ந்து கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாக்பூரை சேர்ந்த ஒரு மாணவர் நீட் தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு சிகார் சென்று ரூ.28 லட்சம் செலவு செய்து வினாத்தாளை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு டெல்லியில் இருந்து போன் செய்து பேப்பர் வந்துவிட்டதாக சொன்னார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். வினாத்தாளின் ஒருபக்கத்தை ரூ.30 ஆயிரம் வாங்கிக்கொண்டு விற்றுள்ளனர். ராஜஸ்தானில் இப்போது கோடாவிற்கு அடுத்தபடியாக சிகார் நகரில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது..

















