ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திம...
நெல்லை: கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு; தற்கொலை செய்த அக்கா... அக்காள் கணவரை கொலைசெய்த தம்பி!
நெல்லை மாவட்டம், களக்காடு அருகிலுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் மனைவி ராஜலெட்சுமி. தம்பதியினர் நெல்லையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. ராஜலெட்சுமி, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவன் – மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த ராஜலெட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜலெட்சுமியின் இறப்புக்கு அவர் கணவர்தான் காரணம் என நினைத்த உறவினர்கள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அக்கம் பக்கத்தினர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடம்போடு வாழ்வு வீட்டிற்குச் சென்றார் வழக்கறிஞர். அங்கு ஒரே காரில் வந்த 3 பேர் வழக்கறிஞரின் வீட்டிற்குள் சென்று, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து களக்காடு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், “திருமணத்தின்போது 70 சவரன் தங்கநகை, சீர்வரிச்சைப் பொருள்கள், 5 லட்சம் ரொக்கப் பணம் கொடுத்தும், மேலும் பணம் கேட்டு வழக்கறிஞர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. கணவன் – மனைவி இடையே நடந்து வந்த குடும்பத் தகராறு குறித்து ராஜலெட்சுமி, தன் சகோதரர் அருணாச்சலராஜாவிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான், ராஜலெட்சுமி தற்கொலை செய்து கொண்டார். தனது அக்காளின் இறப்பிற்கு அவர் கணவர்தான் காரணம் என நினைத்த அருணாச்சலராஜா, தனது நண்பர் ராம் உள்ளிட்ட சிலருடன் கடம்போடுவாழ்விலுள்ள வீட்டிற்குச் சென்று அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்” எனத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சலராஜா மற்றும் ராம் ஆகிய இருவரைக் கைதுசெய்த போலீஸார் மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
















