கிரிக்கெட் மட்டை, கையுறையில் மறைத்து ரூ.1,700 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த...
கிரிக்கெட் மட்டை, கையுறையில் மறைத்து ரூ.1,700 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்; மடக்கிய NCB!
உலகம் முழுவதும் இருந்து மும்பைக்குள் அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. மும்பையில் கலம்பொலி மற்றும் பிவண்டி இடையே வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள், குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அதிகாரிகள் கலம்பொலி மற்றும் பிவண்டி இடையே உள்ள குடோன்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். கலம்பொலியில் உள்ள கே.டபிள்யூ.சி குடோனில் ரெய்டு நடத்தப்பட்டபோது அங்கிருந்து ஒரு கார் அவசரமாக வெளியில் செல்ல முயன்றது.
அந்த காரை மடக்கி ரெய்டு நடத்தப்பட்டதில் ,உள்ளே அதிக அளவில் கிரிக்கெட் மட்டைகளும், கையுறைகளும் இருந்தன. அந்த கிரிக்கெட் மட்டையை சோதித்தபோது அதனுள் 136 கிலோ கொகைன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. கார் டிரைவரிடம் விசாரித்து பிவண்டி என்ற இடத்தில் உள்ள குடோனில் சோதனை நடத்தியபோது அங்கு 213 கிலோ அளவுக்கு கொக்கைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,700 கோடியாகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களின் உள் துவாரங்களுக்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒன்பது அடுக்கு பாலிஎதிலீன்கள் சுற்றப்பட்டிருந்ததாகவும், வெளியில் தெரியாமல் இருக்க கருப்பு க்ரீஸ் பூசப்பட்டு இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த போதைப்பொருள் மும்பை குடோன்களில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து இந்தியா முழுவதும் அனுப்பப்பட இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
‘ஆபரேஷன் ஒயிட் ஸ்டிரைக்’ என்ற பெயரிட்டு போதைப்பொருளுக்கு எதிராக கடந்த ஆறு மாததிற்கும் மேலாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், மும்பை முழுவதும் ரெய்டு நடத்தினர். இதில் உளவுத்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் எந்த நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டது என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 200-300 கிலோ வரையிலான கோகோயின் பறிமுதல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.



















