"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்
சுற்றுலா தலங்களில் குரங்குகள் ஏன் உணவுப்பொருள்களை பிடுங்குகின்றன? இதற்கு 'மனித தவறுகள்' தான் காரணம்!
கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இந்நேரத்திற்கு நம் மக்கள் டூருக்கும், டிரிப்பிற்கும் பிளான் போட்டு சென்றிருப்பார்கள்.
அந்த டிரிப் லிஸ்ட்டில் பெரும்பாலும் வனவிலங்கு சரணாலயங்கள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள் மற்றும் மலைப்பிரதேசங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.
அங்கெல்லாம் நாம் மட்டும் உணவு உண்டு மகிழாமல், அங்கே இருக்கும் வனவிலங்குகளுக்கும் உணவுகளைத் தருவோம். அது சாப்பிடுவதை பார்ப்பதில் நமக்கும், குழந்தைகளுக்கும் செம்ம மகிழ்ச்சி.
ஆனால், நம்முடைய இந்த மகிழ்ச்சி வனவிலங்குகளுக்கு ஆபத்து என்பதை உணர்த்துகிறார் இயற்கை ஆர்வலர் சாம்சன்.

"வன உயிரினங்கள் அனைத்துமே தனக்கான உணவைத் தானே தேடி உண்ணும் தன்மையுடையது.
ஆனால், சுற்றுலா தளங்களிலும், மலைப்பகுதிகளிலும், 'குரங்குகள் அனைத்தும் பாவம்... உணவில்லாமல் கஷ்டப்படுகிறது' என்று நினைத்து, மக்கள் அவைகளுக்கு உணவளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இப்படி மக்கள் குரங்குகள் போன்ற வன விலங்குகளுக்கு உணவளித்துப் பழக்குகிறார்கள். இதனால், அவை அவற்றின் இயல்பான உணவு தேடும் முறையையே மறக்க நேரிடுகிறது. இதன் விளைவு, உணவுக்காக மனிதர்களைச் சார்ந்து வாழ ஆரம்பித்துவிடுகிறது.
ஏன் வனவிலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது?
மனிதர்கள் உணவுக் கொடுக்கும் போது, வன விலங்குகள் உணவைத் தேடாது. இதனால், அவை உணவாகப் பழங்களைச் சாப்பிட்டு, விதைப் பரவல் செய்யும் இயற்கையான செயல்முறை அற்றுப்போகிறது.
இதனால், வன விலங்குகளால் உருவாகும் மரம், செடி, கொடிகள் தடைபட்டுப் போகிறது.
அது மட்டுமல்லாமல் மனிதர்கள் தரக்கூடிய உப்பு கலந்த சத்து இல்லாத ரொட்டிகள், சிற்றுண்டிகள் போன்ற உணவுக்கு அடிமையாகின்றன. இதனால் தான், குரங்குகள் சுற்றுலா தளங்களில் உணவுப் பொருட்களை பிடுங்கி சாப்பிட முயற்சி செய்கிறது.

இதுபோன்ற நேரங்களில் மக்கள் மற்றும் குரங்குகள் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இதில் பலர் காயமடைகின்றனர். நாம் அறியாமையினால் செய்யும் சிறுசிறு தவறுகளினால் பெரிதளவில் காடுகள் உருவாவது பாதிக்கப்பட்டு தடைபடுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒருவர் செய்யும் தவறினால் மற்றவர்கள் பாதிப்படைகின்றனர். குரங்குகள் உணவுப் பொருட்களை மனிதர்களிடமிருந்து பிடுங்க முயற்சி செய்கிறது. அப்பொழுது தர மறுத்தால் மனிதர்களைத் தாக்கவும் நேரிடுகிறது. இதனால் மனிதர்களுக்கு வன உயிரினங்கள் மேல் கோபம் ஏற்படுகிறது.
இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் மனிதர்களாகிய நாம் எந்த ஒரு வன உயிரினத்திற்கும் உணவளிக்காமல் இருப்பதே நல்லது. அதுதான் நம் பல்லுயிர் சுற்றுச்சூழலுக்கும் நன்று, மனிதர்களுக்கும் நல்லது.
மனிதர்களின் உணவு வன விலங்குகளுக்கு ஏற்றதில்லையா...?
வன உயிரினங்கள் மனிதர்கள் கொடுக்கும் உணவினை சாப்பிடுவதால் உடல்நலக் குறைபாடு ஏற்படுவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனவே மனிதர்களாகிய நாம் பறவைகளாக இருக்கட்டும்... மற்ற வன உயிரினங்களாக இருக்கட்டும் எந்த ஒரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்க வேண்டாம்.
அவைகளுடைய உணவைத் தானே இயற்கையில் தேடிக் கொள்ளும். இயற்கையும் அவைகளுக்கு தேவையான அளவு உணவளிக்கும். ஆம்! அந்த இயற்கையை இடையூறு செய்யாமல் இருந்தாலே போதும்.
மரங்கள் காடுகள் அழிந்து வரும் நிலையில் வனவிலங்குகளுக்கு எங்கிருந்து உணவு கிடைக்கும்...?

உதாரணத்திற்கு, குரங்குகள் பழங்களைத் தான் சாப்பிடும் என்பது கிடையாது. இலைகளைக் கூட தன்னுடைய உணவாக உண்ணும். இப்படி தான், அனைத்து வன விலங்குகளும்.
ஆக, நம்மால் முடிந்த அளவு மரங்களை நட வேண்டும். அப்படி நட முடியாவிட்டாலும் மீதம் இருக்கும் மரங்கள் மற்றும் புதர், செடிகள் அனைத்தையும் பாதுகாத்தாலே போதும்.
இயற்கை தன்னைத்தானே சீர் செய்து கொள்ளும். இயற்கை இயற்கையாக இருப்பதற்கு நாம் இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்."





















