ஆர்.எஸ்.எஸ்ஸின் நண்பர், விஷ்ணு ரெட்டியின் உறவினர்.. கிரண்குமார் ரெட்டி தமிழ்நாட்...
நேபாள வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாதுகாப்பு பெட்டகம் - ரூ.92 லட்சத்தை திருடிய 29 பேர் கைது
நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐ தாண்டிவிட்டது. இது தவிர 320 இந்தியர்கள் உட்பட 2500 பேரைக்காணவில்லை. இதில் 500க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மீட்பு பணியில் வெளிநாடுகளை அனுமதிக்க முடியாது என்று நேபாளம் தெரிவித்தது. அதன் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டு சீனா மற்றும் இந்திய மீட்பு குழுக்களை மட்டும் அனுமதித்து இருக்கிறது.
வெள்ளத்தில் பணம் இருந்த பாதுகாப்பு பெட்டகம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. ரசுவாவின் போதேகோஷி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்தப் பாதுகாப்புப் பெட்டகம் அடித்துச் செல்லப்பட்டது. பின்னர் அது பெல்குகோலா அருகே திரிசூலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

அந்த பாதுகாப்பு பெட்டகத்தை அப்பகுதி கிராம மக்கள் திறந்து பார்த்தனர். உள்ளே பணம் இருந்தது. அந்த பணத்தை 29 பேர் பங்கிட்டுக்கொண்டனர். பாதுகாப்பு பெட்டகம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து திருடிய 29 பேர் பிடித்து செல்லப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 92,68,505 ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பிடிபட்டவர்களில் பெரும்பாலோர் கால்ச்சி-4-ல் உள்ள மாஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் கால்ச்சி-6-ல் உள்ள ஆடம்்காட் மற்றும் சித்தலேக்-7-ல் உள்ள ஆடம்டார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் சித்வான் மற்றும் பார்சா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இத்திருட்டில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிதந்து வந்த பிணத்தில் காதணி திருட்டு
மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், நாராயணி ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரின் உடலிலிருந்து தங்கக் காதணிகளைத் திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடலிலிருந்து தங்கக் காதணிகளை அந்த நபர்கள் கழற்றுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவலானதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின்போது, வீட்டின் கூரையில் சிக்கிக்கொண்ட சிறுவன் ஒருவன், மீட்பு ஹெலிகாப்டரின் கவனத்தை ஈர்க்கத் தனது டி-ஷர்ட்டை வேகமாக அசைக்கும் பரபரப்பான காட்சி ஒன்று வைரலாகி இருக்கிறது. தன்னை நோக்கி வரும் ஹெலிகாப்டரைப் பார்த்ததும், அச்சிறுவன் கூரையின் மீது நின்றுகொண்டு தனது டி-ஷர்ட்டை மீண்டும் மீண்டும் அசைப்பதைக் காண முடிகிறது. அந்த வீடு வெள்ளநீரால் சூழப்பட்டிருப்பதால், அவனுக்கு அங்கிருந்து தப்பிக்க மிகக் குறைவான வழிகளே இருந்தது.
சிறுவன் டி சர்ட்டை காட்டியதை மீட்பு படையினரின் ஹெலிகாப்டர் பார்த்தது.

அந்த நேபாள ராணுவ ஹெலிகாப்டர் சிறுவன் நின்ற வீட்டிற்கு அருகில் வந்து, கூரைக்கு மேலே வட்டமடித்தது. சிறுவன் அதில் மிகவும் போராடி ஏறினான். பரபரப்பான அந்த மீட்பு நடவடிக்கையை பார்க்க ஏராளமானோர் கூடினர். எப்போது என்ன நடக்குமோ என்ற பரபரப்பு நீடித்துக்கொண்டே இருந்தது. சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மேலே கொண்டுவரப்பட்ட சில கணங்களிலேயே, பார்வையாளர்கள் நிம்மதியுடன் ஆரவாரம் செய்வதையும் கைதட்டுவதையும் கேட்க முடிந்தது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலனது. நேபாள ராணுவ ஹெலிகாப்டர் குழுவினரின் திறனைப் பாராட்டி சமூக ஊடகங்களில் பயனர்கள் கருத்து தெரிவித்து வருவதால், இந்த வீடியோ பேசுபொருளாக மாறியுள்ளது.



















