சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் ம...
போன் இல்லை, லேப்டாப் இல்லை... 50 வருஷ நட்பைக் கொண்டாடிய கிராமத்துச் சங்கமம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நிலா வெளிச்சம் வானம் முழுக்கவே தன் புன்னகையை வஞ்சனை இல்லாமல் வீசிக்கொண்டிருந்தது. பௌர்ணமிக்கு இன்னும் ரெண்டு நாட்களே இருந்தது.
அந்த தோட்டத்து வீடு செஞ்சேரி மலைக்கும் பெதப்பம்பட்டிக்கும் நடுவில் இருந்தது. 1940 வாக்கில் கட்டப்பட்ட. பெரிய தொட்டிக்கட்டு வீடு.நடைக்கு ரெண்டுபக்கமும் சாய்மானத்துடன் கூடிய பெரிய திண்ணைகள் இருந்தது.பழமை மாறாமல் இன்றைய நவீன வசதிகளுடன் தேவையானதை செய்துஅவ்வப்போதுபுதுப்பிக்கப்பட்டு செமையா இருந்தது.
வீட்டை சுத்தியும் விவசாய பூமி, கிணறு, பம்ப்செட் ,பெரிய நிலத்தடி நீர்த்தொட்டி , நிரந்தர வேலை செய்யும் ஆட்கள் தங்குவதற்கு அருகில் ஒரு கொட்டகை ,மாட்டு சாளை(மாடு கட்டுமிடம்), தீவனங்கள் தானியங்கள் சேமிப்பு வைக்கும் இடம் என்று ஆட பாடலாக விசாலமாக அந்தத் தோட்டம் இருந்தது.
ஆடுமாடுகளுடன் கோழிகளும் சத்தமிட்டுகொண்டிருக்கும்.சிலசமயம் பயிர்களிடையே முயல்களின் தாவல்களும் உண்டு.பாதுகாப்புக்கு நாட்டு நாய்கள்,பறவைகளின் பாடல்கள் செவிகளை வருடிச் செல்லும்,அவ்வப்போது மயில்களின் டான்ஸும் உண்டு...
இயற்கை வளங்களை பார்த்தது போதும். மனித வளங்களை இனி பார்ப்போம்.

வாசலில் கயித்துக் கட்டிலில் படுத்திருந்த தேவராசன் "கண்மணி கண்மணீ கண்மணீணீ!'என்று சத்தம் போட்டார்.'எதுக்கு இந்த ராத்திரி நேரத்திலே இப்பிடி ஏலம் போடுறீங்க? தேவையானதை முதல்லேயே எடுத்துட்டு வர வேண்டியது தானே. என்னைய ஆவியை வாங்கிட்டு. எனக்கென்ன பதினாறு வயசா கூப்பிட்ட உடனே ஓடி வர்றதுக்கு?"என்றபடி கைகளை சேலையில் துடைத்தபடி வந்தாள் கண்மணி.
'அப்ப சரி, நீ போய் உன்ற வேலைய பாரு.. ஈகன் (பேரன்) அனுப்பின வீடியோ போட்டோவை எல்லாம் நானே பாத்துக்கறேன்' என்றார் தேவராசன்..
"என்னது ஈகன் தங்கம் போட்டோ அனுப்பி வெச்சிருக்கானா, எங்கே கொண்டாங்க நானும் கொஞ்சம் பார்க்கறேன்' ஓடி வந்தாள் கண்மணி..
"அட இதென்ன இந்த ஓட்டம் ஓடி வர்றே , எங்காச்சும் விழுந்து கிழுந்து தொலைச்சிறாதே, கை கால் முறிஞ்சுடும், அப்புறம் உன்னைய பாத்துக்கறதுக்கு யாருமில்லே. இப்ப மட்டும் வயசு என்ன ரிவர்ஸுலே போகுதாக்கும்"என்றார்..
"இந்த நக்கல் நையாண்டி எல்லாம் பேசாம போனை குடுங்க முதல்லே, ' என்று வாங்கிய கண்மணி ஐயோ! இங்க பாருங்க ! ஒரு மாசத்துக்கு முன்னாடி உங்க பிரண்ட்ஸ் எல்லாரும் வந்து நாலஞ்சு நாள் இங்க தங்கி இருந்தாங்கல்ல, அப்ப நடந்த கலாட்டா எல்லாத்தையும் போட்டோவுலே வீடியோவுலே புடிச்சு அனுப்பிஇருக்கான்.ரொம்ப ரொம்ப
நல்லா இருக்குதில்லீங்க. வந்திருந்த லேடீஸை விட நாந்தான் இதுலே சின்னவளாத் தெரியறேன் பாருங்க,"என்று சந்தோக்ஷப்பட்டாள்.
"போட்டோ எல்லாம் நல்லாத்தான் இருக்குது.. நீ உன்னையப் பத்தி இப்படி பெருமை பீத்திக்கிறது தான் கொஞ்சங்கூட நல்லா இல்லே. போட்டோலே பார்க்கறது விட அதை மனசுக்குள்ள அசை போடறது இருக்கே அது பேரானந்தம் தான் போ" என்றார் தேவராசன்..
"ரொம்ப சரியா சொன்னீஙக. இன்னும் ரெண்டு நாளைக்கு இருந்துட்டு போக மாட்டாங்களான்னு எனக்கே ஏக்கமா இருந்துச்சு.
அதுசரி ஆம்பளைங்க தான் இப்படி வீட்டை விட்டு வெளிய கிளம்பி வந்துட்டாங்கன்னா இந்த பொம்பளைப் புள்ளைங்களும் தைரியமா வந்திருக்காங்க பாத்தீங்களா ,அது தான் சூப்பர். எப்படியோ நம்ம தோட்டத்துக்கு உங்க
கூடப் படிச்சவங்க எல்லாரும் வந்தது மனசுக்கு நிறைவா இருந்துச்சு. "
"இதுக்கு காரணமெல்லாம் நம்ம
செல்வானும் கோயிந்தானுந்தான்.
நல்ல ஹோட்டல்லே வச்சுக்கலாம், ரெசார்ட்டுக்கு போகலாம்னு யோசனை பண்ணுனவங்களை இங்க வரவச்சதே அவங்கதான்.
நானுங் கூட சொன்னேன் உள்நாடு வெளிநாடு சுத்தி வந்தவங்களுக்கு இது சரிப்பட்டு வராதுன்னு. இதுக்கெல்லாம் விட்டது தாண்டா மத்தது எல்லாம்னு சொல்லிட்டாங்க."
"பொண்ணுங்க எல்லாம் இப்ப வயசு போனதுக்கு அப்புறந்தான் வாரக்கணக்கில் மாசக் கணக்கில் வெளியூர் ,ஆன்மீக சுற்றுலான்னு போயிட்டு வந்துட்டு இருக்காங்க.
ஆனா கூடப் படிச்சவங்க அவங்கவங்க
இணையோட வந்து சந்தோக்ஷப்பட்டு நம்மையும் சந்தோக்ஷப்படுத்திட்டு
போனாங்க பாரு அந்த குடுப்பினை
யாருக்குமே கிடைக்காது."
அது சார்ந்த மலரும் நினைவுகளில் இருவரும் மூழ்கி விட்டனர். அங்கே மௌனம் குடி வந்தது.நடந்த சம்பவங்கள் எல்லாம் கண்முன் திரைக்காவியமாய் விரிந்தது.
முதல்நாள் மதியமே செல்வராஜ்,
கோவிந்தராஜ் ,ஜெயபால் மூன்று பேரும் வந்து விட்டனர்.
"டேய் தேவா! தேவையான ஏற்பாடு எல்லாம் இப்பவே செஞ்சுடுவோம். ஓட்டல் சாப்பாடு வேண்டா.அதனால சமையலுக்குஆள்ஏற்பாடுபண்ணிடு.குளிக்க , படுக்க மத்தபடி வசதி எல்லாம் இங்கஏற்கெனவேதாராளமா இருக்கு.அவசரத் தேவைக்கு தோட்டத்தல ஆள் இருக்கு. காருக்கு பெட்ரோல் புல் பண்ணி வெச்சிடு. மளிகை மத்தபடி தேவைகளையும் இப்பவே வாங்கிட்டுவந்துவச்சிடலாம்.
வர்றபொண்ணுகளை நல்லபடியா
கவனிச்சுக்க வேண்டியது கண்மணி
பொறுப்பு. பணத்தேவை இருந்தாலும்
சொல்லு. நீ எதுக்கும் வெசனப்படவே
வேண்டா. வர்றவங்க அசந்து போகணும். என்னடா , என்ன கண்மணி சரியா? " என்றனர்.

நீங்க கூட இருக்கும்போது இங்க எனக்கு என்னடா கவலை.
சமையலுக்கு நம்ம வாரப்பட்டி வரதராஜன் கிட்டசொல்லிரலாம்.
சாயந்தரம் பால்கார விஜயனுக்கும் சொல்லிரலாம்.சமையல் செய்ய நம்ம சோள குடோன் இருக்கு. யாரும் எதுக்கும் வெளியில் போய் அலை
மோதாம பாத்துக்கலாம்.எங்க தோட்டத்துலே கூடப்போறீங்க எல்லா செலவும் என்னோடது தான்.ஆமா சொல்லிட்டேன். எல்லாருக்கும் இந்த லொகேக்ஷனைக்ஷேர்பண்ணிடு.
யாரும் தடுமாறக்கூடாது.வர்றவங்க சந்தோக்ஷந்தான் நமக்கு முக்கியம்,' என்றார் தேவராசன்.
"சரிடா நாங்க கிளம்பறோம், நாளைக்கு பாக்கலாம்.எதுன்னாலும் உடனே கால் பண்ணு."'நண்பர்கள்
கிளம்பினர்.அஞசுமைல் சுத்தளவில் தான் இவர்கள் மூன்று பேரும் இருந்தனர்.
சமையல்காரர், பால்காரர்,மளிகைக்
கடைக்காரர் எல்லாம் அன்னைக்கு ராத்திரியே வீட்டில் இவர்கள் திட்டமிட்டபடி சொல்லிய அனைத்து
வேலைகளுக்கும் தயாராகி விட்டனர். வாசலுக்கு முன்னாடி இருந்த பெரிய பந்தலின் மீது தென்னை ஓலை கீற்று பின்னிபோடப்பட்டது.வரும்நபர்களின் எண்ணிக்கை,தேவையைப்
பொறுத்து எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்தாகி விட்டது.
வருகிற எல்லாருமே நல்ல நல்ல வேலையிலிருந்து ஓய்வு
பெற்றவர்கள். மத்திய மாநில அரசுப்
பணி ,ராணுவம் , ஆசிரியப்பணி , விவசாயம், சுயதொழில், வியாபாரம் ,
மில்வேலை என்று பலதரப்பட்ட பணிகள்.70களுக்கு முன் பள்ளிக்கல்விமுடித்தவர்கள்.கடந்த
வருடம் இவர்களில் சிலர் மட்டும் கொடைக்கானல் சென்று வந்தனர்.
அடுத்தநாள் காலையில் இருந்தே நண்பர்கள் வரத் தொடங்கி விட்டனர்.பரஸ்பர நலம் விசாரிப்பு முடிந்ததும் காலை உணவாக இட்லி, குதிரைவாலி அரிசி பொங்கல் , உளுந்து வடை,சட்னி, சாம்பார் , சிக்கன் குழம்பு , காபி,டீ பரிமாறி அசத்தினார் வரதராஜ். சாப்பிட்ட அனைவருக்கும் ரொம்ப திருப்தி.
ஆண்கள் இருபது பேரும் பெண்கள் பன்னிரண்டு பேரும் வந்திருந்தனர்.
பிறகு திண்ணையில உக்காந்து
பேசிக்கொண்டிருந்தனர். அலைபேசி தொலைக்காட்சிபார்த்தல் ,அரசியல், சினிமா பேச்சுஇவற்றுக்கு முழு மனதுடன் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
பின்பக்கமிருந்து வந்த மிலிட்டரி சிவா கூட்டத்திலிருந்த நாகராஜு குருசாமி இருவரையும் கண்ணால் சைகை காட்டி அழைத்தார்.இருவரும் நைசாகநழுவுவதைப்பார்த்தபாலு அலுங்காமல்அவர்கள்பின்னால்
போனார்." தண்ணி வாக்கனுமுன்னு
சொன்னியேடா அந்த பாத்ரூமுக்கு போ, க்ஷாம்பு அங்க இருக்குது.போயி
வார்த்துட்டுவா" என்று சிவா
சொல்லவும் , 'நாங்க காலையிலேயே
குளிச்சிட்டு தான் வந்தோம்'னு குருசாமி மறுத்தவுடன் சிவாவுக்கு
கோவம் வந்தது.
'நான் மிலிட்ரி கேன்டீன்லே இருந்து க்ஷாம்பு வாங்கிட்டு வந்திருக்கேன். போய் ரெண்டு பேரும்
குளிச்சிட்டு வாங்கடா.யாரும் வர்றதுக்கு முன்னாடி போயிட்டு வாங்கடா ',என்றுஅவசரப்படுத்தினார்.
இருவரும் பின்னாடி இருந்த குளியலறைக்கு சென்றனர்.யாரோ
வரும் சத்தம் கேட்டு சிவா அந்த இடத்தை விட்டு அகன்றார் . இதை ஒளிந்திருந்து பார்த்த பாலு அவர்கள் இருவரும் வாயைத் துடைத்தபடி வெளியே வந்தவுடன்
உள்ளே சென்று பார்த்தார். க்ஷாம்பு பாட்டிலுக்கு பின் சரக்கு பாட்டில் ஒளிந்திருந்தது . அதை எடுத்து மறைத்துவிட்டு டெட்டால், பினைல்
பாட்டில்களை அங்கே வைத்தார்.
'கூட்டுக்களவாணிகள் வந்து நல்லா தேடட்டும். என்ன தான் நடக்குதுன்னு பார்க்கலாம் ,' என்றபடி
வந்து கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டார். பிறகு பழனிசாமியும்
சின்னதுரையும் சென்றவர்கள் போன வேகத்துல திரும்ப வந்து சிவாவை முறைத்தனர். பாலு உதடு பிரியாமல் சிரித்தார்.

உள்ளிருந்து வந்த வசந்தியும் சாந்தாவும் தெய்வானையும்( டீச்சர்ஸ்) எல்லார்கிட்டேயும் பேப்பரை குடுத்து
"இது தாம்பா மெனுகார்டு. இது கூட வேற ஏதாவது தேவைப்பட்டா அல்லது அலர்ஜி மாதிரி சேராதது இருந்தா
கீழே நோட் பண்ணி பேர் எழதிக் கொடுங்க. கன்சல்ட் பண்ணியோ, அடுத்தவங்களை பார்த்தோ எழுதக்
கூடாது ஓகே ஸ்டார்ட் பண்ணுங்க?,' என்றனர்.
'எழுதி முடிச்சிட்டோம் டீச்சர். மார்க் கொஞ்சம் சேர்த்துப் போடுங்க. படிச்சது எல்லாமே மறந்துடுச்சு. வயசாயிடுச்சல்ல ,
பெயிலுன்னா பெஞ்ச் மேலே ஏற சொல்லிடாதீங்க.முடியாத நிலையில இருக்கோம்,கொஞ்சம் கோவாப்பரேட் பண்ணுங்க டீச்சர்", என்று சுந்தரமும் சுப்பிரமணியமும் எழுந்து நின்று கோரஸ் பாடினர். மற்றவர்கள் சிரித்து கை தட்டினார்கள்.
'அடேய்...ய்ய்.அடேய்...ய்ய். . .என்ன தான் வயசாகி கிழட்டுத்தனம் கதவை தட்டுனாலும் அப்ப இருந்த அந்த குறும்பும் அந்த லொள்ளும் இன்னும் உங்கள விட்டு போகலடா'
என்ற டீச்சர்ஸ் மூவரும்,சட்டென்று
நாக்கை கடித்து கொண்டு ' ஸாரி!ஸாரி!திடீர்னு டங்(Tongue slip) சிலிப்பாகிஒரு புளோவில் சொல்லி விட்டோம்.மறுபடியும் ஸாரி 'என்றனர்.
'இட்ஸ் ஓகே, ஓகே. நாங்க எல்லாம் ஒன்னும் நினைச்சு வருத்தப்பட்டுக்க மாட்டோம் நீங்க நடத்துங்க டீச்சர் , அது மாதிரி நீங்க அடிச்ச கூத்தும் கும்மாளமும் எங்களுக்கு மறந்து போயிடுமா என்ன?! கோபம் வந்தா முட்டி போடச்சொல்றது, இம்போக்ஷிசன் , மத்த மைனஸ் பிளஸ் எல்லாம் உங்க ஆத்துக்காரங்க ஏற்கெனவே சொல்லிட்டாங்க ,அதை பத்தி தான் பேசப் போறோம்.ஏன்னா அலைபேசியோ,தொலைக்காட்சியோஇல்லை.இன்னைக்கு மேக்ஸிமம்
துள்ளிதிரிந்த காலம் டாபிக் தான்னு முடிவுபண்ணிருக்கோம். ஒன்லி பாய்ஸ் ,நோ எண்ட்ரி பார் கேர்ள்ஸ் '
டீச்சர்ஸ் மூவரும் பேப்பர்ஸ்
வாங்கிக்கொணடு 'எங்களுக்கும் பேசறதக்கு நிறைய விக்ஷயங்கள்
இருக்கு . எதைக்கேட்டும் நீங்களும் உள்ள வரக் கூடாது. ஸ்நாக்ஸ் டிரிங்க்ஸ் எல்லாம் கரெக்டா வந்துடும்
டோன்ட் டிஸ்டர்ப் அஸ்" என்று சொல்லி முகத்தை திருப்பிகொண்டு
சென்றனர்.
சிறிதுநேரத்தில் கற்பூரவல்லி இலை பஜ்ஜியும் மேரி பிஸ்கெட்டும்
தூதுவளை ரசமும் தந்து உபசரித்தார் வாரபட்டி வரதராஜ். வித்தியாசமாக இருந்ததில் எல்லாருக்கும் பூரண திருப்தி. பலர் ரெண்டாம் முறை ரசம் வாங்கி குடித்தனர்.
' திருப்தியாடா பசங்களா? ஏதாச்சும் குறை இருந்தா சொல்லிடுங்க , மாத்திக்கலாம்.ஒன்னும் பிரச்னை இல்ல. எல்லா நம்மாளுங்க தான். எதுவும் நினைக்கமாட்டாங்க' என்றார் தேவராசன்.
"அபாரமாக இருந்ததுடா தேவா, நாங்கல்லாம் இத எதிர்பார்ககவே இல்லை. சூப்பர்டா ",என்றனர் ஏகோபித்த குரலில்.
பேச்சு துள்ளி திரிந்த பள்ளிப் பருவத்துக்கு திரும்பியது.கடந்த கால சக்கர வண்டியில் ஏறி பயணமாகினர்.
பயணத்தில் மாணவக்கூத்துகளை, கஷ்டங்களை, பள்ளிக்கு நடந்தே வந்தது, சேர்ந்து உணவருந்தியது , சண்டைபோட்டது, அடித்துக் கொண்டது,போட்டி போட்டு படித்தது, காப்பி அடித்தது, ஆசிரியர்களிடம் அடி
வாங்கினாலும் பெரிதுபடுத்தாமல் நையாண்டி செய்து மகிழ்ந்தது, மாணவிகளை கேலி செய்து சீண்டியது , இன்னும் எத்தனையோ நினைவுகளை ஆழ் மனத்திலிருந்து
வெளிக்கொணர்ந்தனர் .இதை எல்லாம் கண் மூடி அனுபவித்து கொண்டிருந்த ஆனந்தன் ,சவுந்தர் முன் சென்று கைகளை ஆட்டி ஆட்டி சுற்றினார் மௌனசாமி .
திடீரெனக் கண் விழித்த இருவரும்
திடுக்கிட்டு ' என்னடா செய்யற மூஞ்சிக்கு முன்னாடி? மந்திரம் எதாவது போடறியா' என்றனர்.
இல்லடா ! பழைய சினிமால எல்லாம் பிளாஷ் பேக் போகுறப்ப
மூஞ்சிக்கு முன்ன வட்டவட்டமா சுத்துமல்ல அது மாதிரி வருதான்னு பாத்தேன்' என்றார். சிரித்த மத்தவர்களைப் பார்த்து முறைத்தனர்
இருவரும்.
இதற்குள் மசாலா மோரும்,
பானக்கமும் ( கருப்பட்டி புளி ஏலக்காய் கலந்த நீர் ) வந்தது. அவரவர் தேவையானதை குடித்தனர்.
"சரி சரி வாங்கடா ! பம்பு செட்லெ
இல்லன்னா பெரிய நிலத்தடி நீர்த் தொட்டியிலெ நீச்சலடிச்சு நல்லா
ஒரு குளியல் போடலாம்.குளிச்சு முடிச்சுட்டு சாப்பிட வர நேரம் சரியா இருக்கும் துண்டுகளை எடுத்துட்டு வாங்க" என்றார் தேவராசன்.
'அப்ப கிணத்துல குளிக்கலையா?
நாங்க ரொம்ப ஆசையா வந்தோம்' என்று தேவராஜ், பழனிசாமி ,
வேலுசாமி,குணசேகரன், மணியன்,
மாசிலாமணி ,தங்கவேல் எல்லாரும் வருத்தப்பட்டனர்.
"வேண்டாம்டா! எண்பது வயசை
நோக்கி போயிட்டிருக்கோம். கிணறும் ஆழம் ஜாஸ்தி.நம்மள்ளே நிறையப் பேர் ஹார்ட் சர்ஜரி மாதிரி வேற பண்ணிருக்கோம். இனிமேல் எப்பவும் எங்கயும் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்"
என்றார்கள் செல்வானும் கோவிந்தராஜும்.
மற்றவர்களும் இதை ஆமோதிக்க, பம்புசெட்டுக்கு கொஞ்ச பேரும் தொட்டியை நோக்கி கொஞ்ச பேரும் திரும்பினர்."டேய் நில்லுங்கடா!இந்த மா(தி)ரிஎடத்துலஎல்லாகோம(வ)ணம்
கட்டிட்டு குளிச்சு நீச்சலடிச்சா ரொம்ப
ஜோராயிருக்குமுன்னு எங்க தாத்தன்
சொல்லிருக்குடா. இன்னைக்கு நாமளும் டிரை பண்ணிப் பாக்கலாண்டா" என்றார் சிவா.
"இவனோட ஆசைக்கு எப்பவோ செத்தவங்கள எல்லாம் இழுக்கறான்
பாரு.பெரியவங்க யார் பேச்சையும் கேக்காதவன் சொல்றதைக் கேளுங்கடா !?" என்று வெளியில்
சொன்னாலும் உள்ளுக்குள் எல்லாரிடமும் அந்த ஆசை எட்டிப் பார்த்தது.
" சரி சரி இப்ப இவன் ஆசைப்பட்ட
கோவணத் துணிக்கு அதுவும்
இத்தனை பேருக்கு எங்க போறது? என்ன பண்றது? பேசாம வாங்கடா குளிக்கலாம்" என்று கிளம்பிய மௌனசாமியை தடுத்த தேவராசன் "இருங்கடா , ஒரு நிமிஷம் வந்தர்றேன், என்று வேகமா வீட்டுக்கு போனார்.திரும்பி வந்த போது அவரிடம் ஒரு கத்தரிக்கோலும்
அஞ்சு லுங்கியும் இருந்தது.
" உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபணை
இல்லைன்னா இதை வெட்டி பிரிச்சு கட்டிட்டு குளிங்கடா சந்தோஷமா! " என்றார்.கேசவன்(டெய்லர் )வந்து லுங்கிகளை வெட்டி எல்லோர்க்கும்
கொடுத்தார். நாலு லுங்கியே சரியாக இருந்தது.சிவா ஓடி வந்து தேவராசனை கட்டிப்பிடிச்சு முத்தம்
குடுத்தார். இதைப்பார்த்து சந்தோஷப்பட்டனர் மற்றவர்கள்.
ஒரு மணி நேரக் குளியல் முடிஞ்சதும் மனசில்லாமல் திரும்பி
சாப்பிட வந்தனர்."நாளைக்கு ரொம்ப நேரம் குளிக்கனும், யாரும் அவசரப்படவோ அவசரப்படுத்தவோ
கூடாது. அவரவர் கட்டியிருந்த துணிகளை வெயில்ல காய வச்சு பத்திரப்படுத்தி வைங்கடா, இன்னும் நாலு நாளைக்கு இதைத்தான் கட்டணும் ," என்றபடி சாப்பிட வந்தனர்.
" டேபிள் சேர் வேணாண்டா தேவா! திண்ணையில சேந்து உக்காந்து சாப்பிடலாம்.அதான் நல்லாருக்கும்."
என்று நண்பர்கள் விரும்ப அதன் படியே நடந்தது. மட்டன் பிரியாணி, சாதம் ,முருங்கக்கா சாம்பார் , காலிபிளவர் சில்லி,பச்சபுளி
ரசம் ,காலையில் மீந்த சிக்கன்குழம்பு,
தயிர் ,மாங்காஊறுகாய் என வந்தது.

டேய் ! எது வேணுமோகேட்டுவாங்கி
நல்லா சாப்பிடுங்க. அப்பறம் வரதராஜ் !உள்ளே அவங்களையும் வரச்சொல்லிட்டு நீங்களும் நேரங்காலத்தோட சாப்பிடுங்க.
எதாவது தேவைப்பட்டாலோ கஷ்டமா இருந்தாலோ சொல்லு.சமாளிக்க ஏற்பாடு பண்ணிக்கலாம்" என்றார்.
"கஷ்டம்ஒன்னுமில்லண்ணா.இவங்க எல்லாம் கிளம்பற வரை நானும் உதவியாளரும் இங்கதான்தங்கப்
போறோம்.அம்மாக்களும் உதவி
பண்ணுவாங்க. நீங்க கவலைப்படாம பிரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணுங்க" என்றவுடன் இவருக்கு நிம்மதி ஆனது.
தூரத்திலிருந்து வந்த நாலைந்து பேர் ஓய்வடுக்க மற்றவர்கள் தோட்டத்தை சுற்றி பார்த்து வர கிளம்பினர். எல்லோரும் வந்தவுடன்பெண்களையும் கூப்பிட்டு சமோசா ,ராகி பக்கோடா எள்ளுருண்டையுடன் சுக்குமல்லி
காபி சேர்த்து தரப்பட்டது.
தங்களுடன் படிச்சவங்களில் சிலர் மறைந்து விட்டதை நினைவு கூர்ந்து
கவலைப்பட்டனர். இந்த இனிய சங்கமத்திற்கு வராதவர்களை எண்ணி வருந்தினர். இடையில் குறுக்கிட்டபாலு" டேய்! நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம கூடப் படிச்சாள்ள அந்த ஜெயாவை பஸ்லே பார்த்தேன் , ஆள் அடையாளமே தெரியாம மாறிப் போயிருந்தா.
பாத்ததும் எனக்கு கஷ்டமா பாவமா போச்சு"என்றார்.
"நம்ம கிளாஸ் பொண்ணுகள்லே அவ தான் ரொம்ப அழகா இருப்பா"- இது சின்னசாமி.
போடா டேய்! அவ தங்கச்சி விஜயா இவளை விட ரொம்ப அழகா சூப்பரா இருப்பா தெரியுமா?! இது சிவா.
உடனே கர்ச்சீப் எடுத்து சிவாவிடம் நீட்டினார் மௌனசாமி.
"இது எதுக்கடா?, " சிவா கேட்க
"இல்ல! ஜொள்ளு ரொம்ப வழியுது,தொடைச்சுக்கத்தான்!" என்று நக்கலடித்தார் மௌனசாமி.
"பாவம்டா ஜெயா! சின்சியரா வேணுகோபால் சார் மேல பிரியமா இருந்தது. அவரும் அதைப்பத்தி வெளிப்படையாசொல்லிட்டருந்தார். நாம கூட கிண்டல் பண்ணி அடி வாங்குவுமே, ஞாபகம் இருக்கா?
ஆனா என்னாச்சுன்னு தெரியலை.
வாத்தியார் வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டாரு, இந்தப்பொண்ணு கடைசி வரை கல்யாணமே பண்ணலை. நினைச்சா கஷ்டமா இருக்குது ", என்றார் புருஷோத்தமன்.
நானும் சின்னசாமியும் இதப்பத்தி பேசி நிறைய கவலைப்பட்டிருக்கோம். எங்க ரெண்டுபேரில யாரோ ஒருத்தன லவ் பண்ணிருந்தாலும் சந்தோஷமா இருந்திருக்கும். அதுவும் கல்யாணம் பண்ணி நல்லா இருந்திருக்கும்."ம்ம்" விதி யாரை விட்டுது? இல்லடா! "என்று பெருமூச்சு விட்டார் பாலு.

ஒரு நிமிஷம் அங்கே நிலவிய அமைதி அனைவரையும் என்னவோ செய்தது. பாலு ,சின்னசாமி மனைவிகளுக்கு அவர்கள் மேல் கோபம் வந்தாலும் ஏனோ பாவமாகவும் இருந்தது.
டாபிக் தடம் மாறுவதை உணர்ந்த நாகராஜன் "டேய் ! சொல்ல மறந்துட்டேன். நம்ம சுரேஷ், குருசாமி ஜெயபால் சிவானெல்லாம் டி சர்ட்டும் பர்முடாசும் போட்டுட்டு நைட்டு டான்ஸ் ஆடப்போறதா காலையில் பேசிகிட்டிருந்தாங்க, "
அதான் நாங்க..,..."இரு இரு அப்ப நாங்க!? முதலே சொல்லிருந்தா நாங்களும் அதெல்லாம் எடுத்துட்டு வந்திருப்பமல்ல.அப்ப இருந்த உங்க நால்வர் கூட்டணி இப்பவும் மாறவே இல்லன்னு தெரியுதடா .போங்கடா டேய்!. நீங்களும் உங்க ஆட்டமும்" என்று ஆதங்கப்பட்டார் மகாலிங்கம்.
"இப்ப என்ன பிரச்னை?எல்லாரும் பர்முடாஸ் , டி சர்ட் போட்டுட்டு டான்ஸ் ஆடணும் ,அவ்வளவு தானே, சங்கடப்படாதீங்கடா ,ஐம்பது ஐம்பத்தஞ்சு வருஷத்துக்கு அப்புறம் பாக்குறோம் சந்தோஷமா இருப்பம்பா,மத்தியானமே அதெல்லாம் வந்தாச்சு . எல்லாரும் ஒன்னா உள்ளாற போய் அளவு சரிபார்த்து போட்டுட்டு வரலாம்
வாங்க. மாலைநேர காத்த கொஞ்சம் ஜாலியா அனுபவிப்போம்"என்றார்
கோவிந்தராஜ்.
"எப்படறா!எப்ப எப்பிடி இதெல்லாம் நடந்துச்சு?நம்பவே முடியல".எல்லோருக்கும் ஆச்சரியம்.
" அதெல்லாம் அப்படி தான். கார்த்தாலே அவங்க நாலு பேரும் பேசிட்டிருந்தாங்கன்னு சின்னசாமி சொன்னதும் நாங்க ஏற்பாடு பண்ணிட்டோம். நம்ம பழனிசாமி மகன் ஜெயகுமார் திருப்பூரில் பனியன் கம்பெனி இன்சார்ஜா இருக்கான். உத்தேசமா உங்க அளவுகளை கணிச்சு சொன்னதும் அவன் இருபத்தஞ்சு செட் டிரஸ் ஆள் மூலம் உடனே அனுப்பிட்டான்.
ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு யார்
கிட்டயும் சொல்லலே, ஆனா எல்லார்த்துக்குமே அளவெடுத்து தெச்ச மாதிரி கரெக்டா இருக்குடா, என்றனர்.
"பெரியாளுடா நீங்க! சரி சரி யாரும் எதுவும் காட்டிக்காதீங்க. இந்தப் பொம்பளைக திடீர்னு நம்மள இப்படி பார்த்து ஆச்சரிய,மும் பொறாமையும் படட்டும் ,"என்று சிரித்து ஒன்றாக சேர்ந்து பலமாக விசிலடித்தனர் .
சத்தம் கேட்டு கதவைத்திறந்து
வெளியே வந்த பெண்களைப் பார்த்து இவர்களுக்கு மயக்கமே வந்துவிட்டது.
ஒன்னுபோல எல்லாரும் சுடிதார் போட்டிருந்தார்கள்.இது .....இது எப்பிடி இருக்கு என்பது போல் இருந்தது அவர்கள் பார்வை.
" உங்களுக்கு மட்டும் தான் சர்ப்ரைஸ் கொடுக்க தெரியுமா? மத்தியானம் திருப்பூர் பார்சல் வந்ததுமே,விவரத்தை தெரிஞ்சு கிட்ட நாங்க நாலுபேர் கிளம்பி பெதப்பம் பட்டி போய் எங்க எல்லார்த்துக்கும் எடுத்துட்டு வந்தோம்",இந்திராணியும்
சரசும் சொன்னார்கள்.
"டேய்! நம்மளை எல்லாம் மிஞ்சின கில்லாடிகளா இருக்காங்கடா, நாம தான் ஜாக்கிரதையாக இருக்கணும் போல " என்ற மௌனசாமிக்கு மற்றவர்கள்தலையசைத்தார்கள்.
பின்னர் இசை நாற்காலி போட்டி தனித்தனியாக நடந்தது.இதில்
ஜெயித்த முதல் மூன்று நபர்களை சேர்த்து மீண்டும் சுற்ற விட்டார்கள். இறுதியில் முதல் மூன்று இடங்களும் பெண்களே வென்றனர். சுடிதார் போட்டு ஓடியதால் தான் ஜெயிச்சீங்க என்று ஆண்கள் அணி குற்றம்சாட்ட
அங்கு சிறு சலசலப்பு வந்து போனது.
பால் கறந்து விட்டு வந்த விஜயன்
இதை பார்தது சந்தோஷப்பட்டு "விளையாட்டு எல்லாமே அருமை அண்ணா, நாளைக்கு என்னபண்ணப் போறீங்க? என்று கேட்க,"பாட்டுக்கு பாட்டு , ஒயிலாட்டம்,கும்மி எல்லாம் பிளான் பண்ணிருக்கோம்" என்றனர்.
"அண்ணாண்ணா! ஒயிலாட்டத்துக்கு
நானும் வர்றேண்ணா, முதலெல்லாம்
செஞ்சேரிமலை தேரு, சந்திராபுரம் சிவராத்திரி நோம்பிக்கெல்லாம்
ஊர்க்காரங்களே ஆடுவாங்க , இப்பல்லாம் காசு குடுத்து குரூப்பை கூட்டிட்டு வர்றாங்க. அது நல்லால்லே.சொசைட்டிக்கு சீக்கிரம் பால் சப்ளை பண்ணிட்டு நானும் வந்து ஜாயின்பண்ணிக்கிறேன்"
என்ற விஜயனுக்கு ஓகே செய்தனர்.
இரவு உணவு எளிமையாக முடிந்தது .மதியம் மீதியான உணவுடன் கொஞ்சம் உப்புமா தயிர் போதும்என்றுசொல்லிவிட்டனர்.பின்பு ரெண்டு வெளிப்புற திண்ணையிலும் ஆண்கள் படுத்துக்கொண்டனர். பெண்கள் உள்ளே தொட்டிக்கட்டு வராண்டாவில் உறங்க சென்றனர். பத்து நிமிடம் கழித்து சுந்தரியும் அன்னபூரணியும் எக்ஸ்ட்ரா தலையணை இல்லாமல்இவர்கள்
தூங்க மாட்டார்களே என்று கூறி வெளியில் வந்து பார்த்தால் தலையணைகள் எல்லாம் ஒரு ஓரத்தில் கிடந்தன. எல்லோருமே கையை தலைக்கு கீழ் வைத்து ஆனந்தமாக தூங்கியது ஆச்சரியமாக இருந்தது.
மிக நீண்ட நாட்களுககுப் பிறகு நிம்மதியாக உறங்கியதாக மறுநாள் எல்லாரும் உற்சாகத்துடன் கூறினார்கள்.
"அப்படியே வேப்பம்குச்சியலெ பல் வெளக்கிட்டு கொஞ்ச தூரம் காலாற நடந்து வெளியே போயிட்டு பம்புசெட்லே குளிச்சிட்டு வருவோம் என சிலர் துண்டை எடுத்துட்டு கிளம்ப"டோன்ட் மோட்டிவேட் ஓப்பன் ஏர் டெபிகேஷன்(open air defecation) என புருஷோத்தமன் தடுக்க "அவன் கிடக்கறான் வாங்கடா நீங்க! என மற்றவர்கள் மறைவிடம்சென்றார்கள்.
ஏதோ சத்தம் கேட்டு திரும்பினால்
"டேய்! நானும் வர்றெண்டா ,விட்டுட்டு போகாதீங்க"ன்னு,புருஷோத்தமன் மூச்சிரைக்க ஓடி வந்ததை பார்க்க சிலருக்கு பாவமாகவும் சிலருக்கு கிண்டலாகவும் இருந்தது.
திரும்பி வந்தவுடன் வரதராஜ், சோளப்பணியாரம்,முடக்கத்தான் தோசை, கரைச்ச பழைய சோறு சின்ன வெங்காயம் பிரண்டை சட்னி, தக்காளி குழம்பு,தண்ணிச்சட்னி,
புதினா டீ தந்து உபசரித்தார்.
பின்னர் சிலர் டிராக்டர்ஓட்டிப்பார்க்க, சிலர் மாமரத்தில் ஏற முயன்றனர்.
சிறிது நேரம் அடுத்தவரது சிறு வயசு குறும்புகள்,குசும்புகள்அலசப்பட்டன.ஆனால் யாருமே எதற்குமே
வேறறுமை பாராட்டவில்லை.
சொந்தங்கள்,சொத்துகள்,படிப்பு,
வேலை, பொழுதுபோக்கு எதைப்
பற்றியும் விவாதிக்கவில்லை.முதல் நாள் தவிர மற்றபடி புகை,மது போன்றவை பக்கம் யாருடைய
நினைவும்செல்லவில்லை.பள்ளிப்
பருவ வயதையும் அனுபவத்தையும் ஆனந்தமாக திரும்ப உணர்ந்தனர்.
மதியம் பரிமாறப்பட்ட ராகி களி, கருவாடுகத்தரிக்காய்குழம்பு,நிலக்
கடலைசட்னி ,சாதம்,பதினாதொக்கு பலாக்கொட்டைஅவரைப்பருப்பு மசியல்,வெத்தலை ரசம் , தயிர் அனைத்தும் அமிர்தமாக இருந்தது.
சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். பெண்கள் தங்களை கண்டு கொள்ளாமல் அவர்களுக்குள் கூட்டாக இருந்ததை சிலாகித்து பேசினர். நாலுமணிக்கு அனைவரும் மெயின்ரோடு வரை நடந்துட்டு வந்து கோதுமை கச்சாயம் , தினை முறுக்கு, வேகவைத்த நிலக்கடலை சாப்பிட்டு சுக்குப்பால் குடித்தனர்.
பின்னர் ஆண்களும் பெண்களும்
எதிரெதிர் அமர்ந்து பாட்டுக்கு பாட்டு போட்டி நடத்தப்பட்டது.போட்டி அமைப்பாளராக தோட்டத்தில் வேலை பார்க்கும்(சினிமா பாடல்களை நன்றாகப்பாடுபவர்) சொக்கப்பன்
இருந்தார். சுவாரசியமாக நடந்த போட்டியில் பெண்கள் அணி வென்றது. பிறகு ஒவ்வொருவரும் சீட்டுகளில் எழுதியிருந்ததை நடித்துக் காட்டினர். இதில் மட்டும் ஆண்கள் ஜெயித்தனர்.
இரவு உணவுக்குப் பின் வேட்டி
கட்டிக் கொண்டு கையில் சிறு துண்டுடன் ஒயிலாட்டத்துக்கு தயார்
ஆனார்கள்.பால்கார விஜயனுடன்
பக்கத்து தோட்டப்பெரியவர்கள் நாலு
பேரும் சேர்ந்து கொண்டனர். ஆடத்தெரியாமல் இருந்தவர்களும் சிறிது நேரம் கவனித்துப்பாத்து வந்து சேர்ந்து கொண்டார்கள். ஆட்டம் செமையாக இருந்ததைப்பாத்து எல்லாருக்கும் புதுமையாகவும் பெருமையாகவும் இருந்தது. பாடல்பாடிய சொக்கப்பன் பாராட்டு மழையில் நனைந்தார்.
அப்புறம் பெண்கள் எல்லாம் பின்கொசுவம் வச்சு சேலை கட்டிக் கொண்டு நாட்டுப்புற பாடல் புகழ் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாட்டுக்கு சூப்பரா கும்மியடித்தார்கள்.
எழுந்த கைதட்டலும் ஆரவாரமும் ஆடு மாடு கோழிகளை கூட தலை தூக்கி பார்க்கவைத்தது.
அடுத்த நாள் காலையில் எழும்போதே எல்லோரிடமும் ஏக்கமும் சோகமும்தலை தூக்கி இருந்தது. வரதராஜ் வந்து பலமுறை வற்புறுத்திய பிறகே மூலிகை டீ (செம்பருத்திப்பூ,சங்குப்பூ , புதினா, துளசி,கற்பூரவல்லி எலுமிச்சை இலை சுக்கு மல்லி சேர்ந்தது)குடித்தனர். காலை உணவும் மனசில்லாமல் உள்ளே இறங்கியது. பதினோரு மணிக்கு கார்கள் வந்து விட்டன. போகும் வழியில் மதிய உணவுக்கு கறிப்பலாபிரியாணி,உருளைக் கிழங்கு வறுவல், கம்புத்தயிர்சோறு, நார்ததங்காய் ஊறுகாய் ,மசாலா மோர் ,தண்ணீர் அனைத்தும் பார்சல் செய்து கொடுக்கப்பட்டது.
எவ்வளவோ போராட்டத்துக்குப்பின்
துணிமணிக்கான செலவு வற்புறுத்தி செல்வானிடம் திணிக்கப்பட்டது. சமையல் வேலைக்கு வாரப்பட்டி வரதராஜ் வந்தவர்களிடம் பணம் வாங்க மறுத்துவிட்டார். சொக்கப்பன் மட்டும் அவர்களின் அன்பளிப்பை ஏற்றுக்கொண்டார். பெண்கள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடிச்சுட்டு கண்ணீர் விட்டனர். ஆண்களோ பேசமுடியாமல் கண்களாலேயே விடைபெற்றனர்.
ஆடு மாடு கோழிகள் எல்லாம் தலையசைத்து அனுப்பி வைத்தன.
இனி எப்போது சந்திப்போமோ என்ற ஏக்கம் அனைவரிடமும் இருந்தது.
சீசன் முடிந்து பறவைகள் பறந்து சென்றுவிட்ட வேடந்தாங்கல் போல் வெறிச்சோடிப்போனது அந்த தோட்டமும் ,தொட்டிக்கட்டு வீடும். வரதராஜும் விஜயனும் இந்த புது அனுபவத்தை பெருமைப்படுத்தி
பேசினார்கள். வரதராஜ் பேசிய தொகையில் பாதி மட்டுமே போதும்
என்று மன்றாடி முழு திருப்தியுடன்
பெற்றுக்கொண்டார். அவரது உதவியாளர் குணா தான் எடுத்த போட்டோக்கள்,வீடியோக்களை வெளியிலிருக்கும் அவரின் மகனுக்கும் மகளுக்கும் அனுப்பி விட்டதாக கூறி சந்தோஷப்பட்டார்.
செல்வானும் கோயிந்தனும் ஜெயபாலும் " அனுபவிச்சு ஜெயிச்சோம்டா தேவா!"என்று பெருமைப்பட்டு சென்றனர் .
"என்னங்க! எல்லாரும் கிளம்பிட்டாங்க,பனி பெய்யுது, எந்திரிச்சு உள்ள வந்து படுங்க."
என்று சொல்லி திரும்பிப்பார்த்த கண்மணி , கணவர் இன்னும் அந்த நினைவுகளிலிருந்து மீளவில்லை என்றுணர்ந்து தொந்தரவு செய்யாமல் எழுந்து போனாள்.
பகல் போல் ஒளிவீசிக் கொண்டு இருந்த நிலாவும் நாமும் தொந்தரவு தரக்கூடாதென மேகத்துக்குள் மெல்ல நுழைந்துமறைந்து சென்றது.
-நீலவேணி தேவராஜன்,
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ



















