ஜனநாயகன்: ``சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு.....
மகாராஷ்டிரா: உள்ளாட்சி தேர்தல்; பதவிக்காக ஒவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்த பாஜக- பட்னாவிஸ் எதிர்ப்பு!
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நகராட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் சிவசேனா(ஷிண்டே)வும் பா.ஜ.க-வும் சில நகராட்சிகளில் கூட்டணி அமைத்தும், சில நகராட்சிகளில் தனித்தும் போட்டியிட்டன. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் சிவசேனா ஆட்சியைப் பிடிக்க போதிய இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. அதேசமயம் நகராட்சி தலைவர் பதவியை பா.ஜ.க பிடித்துவிட்டது. இதையடுத்து அம்பர்நாத் நகராட்சியில் துணை மேயர் உட்பட முக்கிய பதவிகளைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியோடு பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளது. இதனை சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
காங்கிரஸ் மட்டுமல்லாது அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடனும் பா.ஜ.க கூட்டணி அமைத்து இருக்கிறது. முற்றிலும் முஸ்லீம்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்திருப்பது, கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அகோலா மாவட்டத்தில் உள்ள அகோட் நகராட்சியில் மொத்தமுள்ள 35 வார்டுகளில் பா.ஜ.க 11 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸ் 6 இடங்களிலும், ஒவைசி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. இங்கு ஆட்சியைப் பிடிக்க ஒவைசி கட்சியை பா.ஜ.க கூட்டணியில் சேர்த்துக்கொண்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவையும் இக்கூட்டணியில் சேர்த்துக்கொண்டுள்ள பா.ஜ.க அதற்கு அகோட் விகாஸ் மஞ்ச் என்று பெயரிட்டுள்ளது. இக்கூட்டணிக்கு 25 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து இருக்கிறது.
இக்கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''இக்கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிரானது. காங்கிரஸ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகளுடன் பா.ஜ.க கூட்டணி வைத்தது கண்டிக்கத்தக்கது. இக்கூட்டணிக்கு கட்சித் தலைமை ஒப்புதல் கொடுக்கவில்லை. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார். இக்கூட்டணியை சிவசேனா(உத்தவ்)வும் கடுமையாக கண்டித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவுத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகோட் மற்றும் அம்பர்நாத்தில் பா.ஜ.கவின் அற்பத்தனமான நடத்தையைக் காட்டுகிறது. ஆட்சியைப் பிடிக்க யாருடனும் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் என்று இதன் மூலம் தெரிகிறது. இவ்விவகாரத்தில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது''என்று தெரிவித்துள்ளார்.














