ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' - உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்...
திற்பரப்பில் பீதியைக் கிளப்பும் முதலை; மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கும் எம்.எல்.ஏ!
இயற்கை எழில் சூழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. ஆண்டின் அனைத்து நாள்களிலும் தண்ணீர் கொட்டும் என்பதால் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேறும் உபரி தண்ணீர் கோதையாறு வழியாகப் பாய்ந்து வரும் வழியில், திற்பரப்பு பகுதியில் அருவியாகப் பாய்கிறது. திற்பரப்பு அருகே உள்ள தோட்டவாரம் பகுதிக்கும் செங்குழிக்கரை-க்கும் இடையே ஓடும் கோதையாற்றின் உள்பகுதியிலுள்ள தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றில் அமைந்திருக்கும் அந்தக் குடிநீர்த் தொட்டியின் மேற்பகுதியில் முதலை ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதை சில நாள்களுக்கு முன் அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், முதலை நடமாட்டம் குறித்து உறுதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே தொழிலாளி ஒருவர் அதிகாலையில் ரப்பர் பால் வெட்டுவதற்காகச் சென்ற சமயத்தில் ஆற்றில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மேல் படுத்திருந்த முதலையை பார்த்து செல்போனில் போட்டோ எடுத்தார். அதைத் தொடர்ந்து முதலை நடமாட்டம் உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னர் நேற்றும் அதற்கு முந்தைய தினமும் பலமுறை மக்கள் முதலையை நேரில் பார்த்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு அச்சம் தொற்றிக்கொண்டது.

மக்கள் குளிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கும் அதிகமாகப் பயன்படுத்தும் ஆற்றில் முதலை நடமாட்டம் உறுதிசெய்த பின்பும், முதலையைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் திற்பரப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், களியல் பகுதி வனத்துறை ரேஞ்சர் முகைதீன் அப்துல்காதர் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். வனத்துறை சார்பில் எடுக்கப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், முதலையை அப்புறப்படுத்த மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

பின்னர் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ கூறுகையில், "முதலை நடமாட்டம் உள்ள ஆற்று பகுதியில் மக்கள் சில நாள்களுக்கு இறங்காமல் இருக்கவேண்டும். முதலையைப் பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை சார்பில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் எத்தனை முதலைகள் உள்ளன என்பதை உறுதி செய்ய வனத்துறை தெர்மல் இமேஜ் எடுக்க முடிவு செய்துள்ளது. அதற்காக ட்ரோன் கேமரா மூலமாக படம் எடுக்கும் பணிகள் துவங்கும். கணக்கெடுக்க வசதியாக ஆற்றோரம் உள்ள புதர்கள் அகற்றப்படும்.
எத்தனை முதலைகள் ஆற்றில் உள்ளன என்பதை உறுதிசெய்துவிட்டால், அதை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒருசில நாள்களில் இந்தப் பணிகள் முழுமைபெறும். மக்களின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால் இந்தப் பணிகளை நான் தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளேன். மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முதலைகளைப் பிடித்து அப்புறப்படுத்தும் வரை குறிப்பிட்ட பகுதியில் ஆற்றில் இறங்க வேண்டாம்" என்றார்.
















