``நான் ஆசிரமத்துக்குப் போகிறேன்... இனி அங்குதான் இருப்பேன்!" - பிரசாந்த் கிஷோரின...
மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்; `முதல்வரிடம் பேசினோம்'- சிபிஎம் சண்முகம் விளக்கம்!
மே10-ம் தேதி முதல்வர் விஜய் பதவியேற்ற போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டது சர்ச்சையானது. வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக இசைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் முதலில் இசைக்கப்படும், இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மீண்டும் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டுள்ளது. மேடையில் முதல்வர் விஜய் இருந்த நிலையில், முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும் பாடப்பட்டது. இறுதியாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. அரசு விழாக்களில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு தெரிவித்திருந்தபோதிலும், தமிழ்நாட்டில் வழக்கமான மரபே பின்பற்றப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தவெக கூட்டணியில் இருக்கும் சிபிஎம் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து எனப் பாடப்பட்டது குறித்து முதல்வர் விஜய்யிடம் கேள்வி எழுப்பினோம். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இத்தகையை வழிமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு. அதை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆளுநரிடம் பேசினோம். ஆனால், ஆளுநர் மறுத்துவிட்டார்.
மத்திய அரசின் பிரதிநிதி என்ற அடிப்படையில், மத்திய அரசின் உத்தரவை நான் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் கூறிவிட்டார். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இதைத் தவிர்க்க முடியாது என ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இந்த உத்தரவு பிப்ரவரி மாதத்தில்தான் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நாங்கள் அதை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். சட்டப்பேரவையிலும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படாது என நம்புகிறோம். அப்படி நடந்தால் என்ன செய்வது என அப்போது முடிவுசெய்துகொள்ளலாம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.












