"ஈரான் போரைத் தொடங்கியதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை; காரணம்..." - ட்ரம்ப்
"மும்பை முழுக்க குப்பைமயம்" - நாட்டின் பணக்கார மாநகராட்சியைச் சாடிய உயர்நீதிமன்றம்
மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னம்வார் நகர் மக்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கிரீஷ் குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு மாநகராட்சியின் செயல்பாடு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, மும்பை மாநகராட்சியிடம், "முழு நகரமும் குப்பைகளால் சூழப்பட்டுள்ளதா? குப்பை அகற்றும் நிர்வாகம் செயலிழந்துவிட்டனவா?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், "எங்கும் குப்பைதான் நிறைந்துள்ளது. மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம். மாநகராட்சி நிர்வாகம் சரியாகச் செயல்படவில்லை என்றே தோன்றுகிறது. உங்களிடம் முறையான நிலையான செயல்பாட்டு நடைமுறை இருக்க வேண்டும். அப்படியிருக்க, நம்மை நாமே எப்படி ஒரு சர்வதேச நகரம் என்று சொல்லிக்கொள்ள முடியும்?. ஒவ்வொரு வார்டிலும் நிலவும் சுகாதாரமின்மைக்கு அந்தந்த வார்டு அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும்.

தங்கள் கடமைகளைச் சரி வரச் செய்யத் தவறுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இனி இந்த அதிகாரிகளையும் நாங்கள் பொறுப்பேற்க வைப்போம். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நகரம் முழுவதும் குப்பைகள் நிறைந்துள்ளன. இனி இது தொடரக்கூடாது. மாநகராட்சி எங்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. நிலைமையைச் சீர்செய்யுமாறு ஆணையருக்கு உத்தரவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இது ஒரு தீவிரமான மற்றும் மிகவும் வேதனையளிக்கக்கூடிய விஷயம். நகரில் குப்பை குவியல்கள் எப்போதும் காணப்படும் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தும், சம்பந்தப்பட்ட வார்டு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தூய்மைப் பணிகளுக்கு சமூக ஊடகப் பிரபலங்களைப் பயன்படுத்தலாம். பொதுச் சாலைகளில் குப்பையை வீசுபவர்கள் மீது அபராதம் விதிப்பது மற்றும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது குறித்தும் மாநகராட்சி அமைப்பு பரிசீலிக்க வேண்டும்" என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.


















