ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார்.
3.50 ஏக்கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய வேண்டுமானால் தங்களுக்குக் கட்டாயம் ரூ.7 லட்சம் லஞ்சம் வழங்கியாக வேண்டும் எனச் சங்கர் கூறியுள்ளார். லஞ்சமாக பணத்தைக் கொடுக்க விரும்பாத விவசாயி கார்த்திக், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளில் ரசாயனம் தடவி அந்தப் பணத்தை கார்த்திக் கையில் கொடுத்துள்ளனர்.

கார்த்திக் மூலமே சங்கர் கையில் கொடுக்க செய்துள்ளனர். பத்திர எழுத்தர் வெற்றியிடம் வழங்கும்படி சங்கர் கூறிய நிலையில், நேற்று மாலை வெற்றியிடம் அந்தப் பணத்தை வழங்கியுள்ளார் கார்த்திக். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீஸார் கையும் களவுமாக வெற்றியையும் சங்கரையும் கைது செய்துள்ளனர்.
மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்ய சப்- ரிஜிஸ்டர் மற்றும் பத்திர எழுத்தர் இருவரும் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

















