செய்திகள் :

ரூ.167 கோடிக்கு விற்பனையான ராஜா ரவிவர்மா ஓவியம்: இந்தியக் கலை உலகில் புதிய சாதனை!

post image

அது ஒரு விறுவிறுப்பான கலைப்பொருள் ஏலக் கூடம். அனைவரின் பார்வையும் ஒரு குறிப்பிட்ட ஓவியத்தின் மீதுதான் நிலைத்திருந்தது. அது சாதாரண ஓவியம் அல்ல, இந்தியாவின் ஈடு இணையற்ற ஓவியரான ராஜா ரவிவர்மா தனது தூரிகையால் உயிர் கொடுத்த `யசோதை கிருஷ்ணன்' ஓவியம். ஏலம் கேட்கும் போட்டி சூடுபிடிக்க, இறுதியில் அந்த ஓவியம் யாரும் எதிர்பாராத வகையில் ரூ.167.2 கோடிக்கு (சுமார் 18 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இதன் மூலம், நவீன இந்தியக் கலை வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற மாபெரும் சாதனையை இது படைத்துள்ளது.

ravi varma
ravi varma

சாஃப்ரான்ஆர்ட் (Saffronart) நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், இந்த ஓவியத்தை வாங்கியவர் பிரபல தொழிலதிபரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிறுவனருமான சைரஸ் எஸ். பூனாவாலா. இதற்கு முன்பு எம்.எஃப். உசேன் அவர்களின் `அன்டைட்டில்ட் (கிராம் யாத்ரா)' ஓவியம் ஒன்று கடந்த ஆண்டு ரூ.118 கோடிக்கு விற்கப்பட்டதே மிகப்பெரிய சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ரவிவர்மாவின் 'யசோதை-கிருஷ்ணன்' முறியடித்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த ஓவியத்தின் மதிப்பு ரூ.80 முதல் ரூ.120 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏலத்தின் முடிவில் அது இருமடங்கு அதிக விலைக்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியத்தை வாங்கியது குறித்துப் பேசிய பூனாவாலா, "இது ஒரு தேசியப் பொக்கிஷம். இதனை என் வசம் வைத்திருப்பதை ஒரு பொறுப்பாகவே கருதுகிறேன். பொதுமக்கள் இந்த ஓவியத்தை அவ்வப்போது பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே எனது நோக்கம்" என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ravi varma painting
ravi varma painting

ஓவியத்தின் சிறப்பு:

1890-களில், ரவிவர்மா தனது கலைத்திறனின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த ஓவியம் வரையப்பட்டது. யசோதையின் தூய்மையான தாய்மையின் அன்பையும், குழந்தை கிருஷ்ணனின் வசீகரத்தையும் இதிகாசப் பின்னணியில் மிகத் தத்ரூபமாக ரவிவர்மா இதில் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று இந்தியர்கள் பலரும் தங்களின் மனதில் சரஸ்வதி, லட்சுமி, ராமர், கிருஷ்ணர் போன்ற தெய்வங்களை எப்படி உருவகப்படுத்தி வணங்குகிறார்களோ, அந்த அழகிய உருவங்களை வடிவமைத்து மக்களின் மனதில் ஆழமாகப் பதியவைத்த பெருமை ரவிவர்மாவையே சேரும்.

சாகித்ய அகாதமி: `இந்த' நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருது!

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.2025-ம் ஆண்டு... மேலும் பார்க்க

திருச்சி: நாதஸ்வர மேதை ஷேக் மெகபூப் சுபானி மறைவு - சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நாதஸ்வர மேதை ஷேக் மெகபூப் சுபானி, தனது குடும்பத்தின் 8-வது தலைமுறை நாதஸ்வரக் கலைஞராக பரிமளித்து வந்தார். தனது தந்தை ஷேக் மீரா சாகிப்பிடம் இசை ப... மேலும் பார்க்க