காங்கிரஸ்: ``அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா?" - `NO' சொல்லும் கார்த்தி சிதம்பரம...
"அசாதாரணமான LSG பேட்டிங், சிரமப்பட்ட CSK பேட்டிங்..." - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்
ஐபிஎல் 2026 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சென்னையை அதிர்ச்சி தோல்வியடைய செய்தது.
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த லக்னோ அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 187/5 என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.
ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தபோதிலும், பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர். இருப்பினும், இந்தக் கடினமான இலக்கை லக்னோ அணி வெறும் 16.4 ஓவர்களிலேயே விக்கெட்டுகளை இழந்து மிக எளிதாக விரட்டிப் பிடித்தது.

இதன் மூலம் சிஎஸ்கே அணியின் தொடர்ச்சியான வெற்றிகள் முடிவுக்கு வந்ததுடன், அவர்களின் பிளேஆஃப் தகுதி வாய்ப்பும் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணி சந்தித்த சறுக்கல் காரணமாக, புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேற சென்னை அணிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பியதால் அந்த வாய்ப்பை சென்னை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பத்ரிநாத் கடுமையான விமர்சனம்:
சென்னை அணியின் இந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் 'தவறான யுக்தி' மற்றும் அணித் தேர்வு குறித்து சிஎஸ்கே முன்னாள் பேட்ஸ்மேன் சுப்பிரமணியம் பத்ரிநாத் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ``அணித் தேர்வுப் பிழைகளால் சிஎஸ்கே தோற்பது இந்தச் சீசனில் ஒரு வழக்கமாகி வருகிறது. இந்த ஆடுகளத்தின் தன்மையை உணராமல், அகீல் ஹொசைனை அணியில் சேர்க்காமல் விட்டது முற்றிலும் அர்த்தமற்றது. மற்றொரு தவறவிட்ட வாய்ப்பு," என்று ருதுராஜின் வியூகங்களைச் சாடியுள்ளார்.

ரிதுராஜ் கெய்க்வாட் விளக்கம்:
தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரிதுராஜ் கெய்க்வாட் பதற்றமடையாமல் நிதானமாகப் பேசினார். ஆட்டத்தின் போக்கை விவரித்த அவர், ``வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக ஏதோ ஒன்று ஆடுகளத்தில் இருந்ததாக நான் உணர்ந்தேன். நாங்கள் பேட் செய்தபோது, கடினமான லென்தில் பந்தை அடிப்பது எங்களுக்குச் சிரமமாக இருந்தது. அவர்களின் பந்து வீச்சாளர்கள் அதை மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.
நாங்கள் 160 அல்லது 170 ரன்களைத்தான் எதிர்பார்த்தோம், ஆனால் இறுதியில் 180 ரன்களுக்கு மேல் எடுத்தோம். எனவே, பேட்டிங்கைப் பொறுத்தவரை இதைவிடச் சிறப்பாக எங்களால் எதுவும் செய்திருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன்.
ஆனால், லக்னோ அணியினரைப் பாராட்ட வேண்டும். அவர்கள் சில அசாதாரணமான ஷாட்களை விளையாடி, மிகச் சிறப்பாக பேட் செய்தார்கள். நாங்கள் மீண்டும் வலுவாகத் திரும்பி வந்து, நாங்கள் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் என்னென்ன என்பதில் கவனம் செலுத்தி முன்னேற்றம் காண்பதை உறுதி செய்ய வேண்டும். முடிந்தவரை விரைவாக சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
இனி எங்களுக்கு கணக்கு மிகவும் எளிதானதுதான். நாங்கள் விளையாடும் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும். இதில் சிக்கல் ஒன்றுமில்லை. கவலைப்படவும் தேவையில்லை. எங்களுக்கு ஒரு நல்ல நாள் அமைவதை உறுதி செய்து, அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு ஆட்டங்களில் கவனம் செலுத்தி, நிலைமையை நிச்சயம் மாற்றுவோம்" என்றார்.


















