முதல்வர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு ...
அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது?
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் கடந்த ஜனவரி 28ம் தேதி காலை பாராமதி விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த அஜித்பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தும் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் விபத்துக்கான காரணம், எப்படி விபத்து நடந்தது என்பது குறித்து விமானவிபத்து விசாரணை அமைப்பு விசாரித்து வந்தது. அந்த அமைப்பு தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் விமானம் தரையிறங்கும்போது விமான நிலையத்தில் வெளிச்சத்தின் அளவு 3 கிலோமீட்டராக இருந்தது. ஆனால் விமானம் தரையிறங்க வெளிச்சத்தின் அளவு குறைந்த பட்சம் 5 கிலோமீட்டராக இருக்கவேண்டும்.
போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்தான் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. கீழே விழும்போது முதலில் ஒரு மரத்தில் மோதி அதன் பிறகுதான் கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது. விமானத்தின் பைலட் காலை 8.19 மணிக்கு பாராமதி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார்.

தாங்கள் புனேயில் இருந்து வந்து கொண்டிருப்பதாக பைலட் தெரிவித்துள்ளார். 8.27 மணிக்கு விமானநிலையத்தில் ஓடுதளம் பயன்பாட்டில் இருப்பதாகவும், காற்று இல்லாமல் இருப்பதாகவும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.
அதேநேரத்தில் ஓடுதளத்தில் தரையிறங்க அனுமதிக்கும்படி பைலட் கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு 8.29 மணிக்கு மீண்டும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இறங்க அனுமதிக்கும்படி பைலட் கேட்டுக்கொண்டார். அதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. காலை 8.31 மணிக்கு விமான நிலையத்தில் வெளிச்சத்தின் அளவு குறித்து பைலட் கட்டுப்பாட்டு அறையில் கேட்டார். அதற்கு வெளிச்சம் 3 கிலோமீட்டராக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
அப்படி இருந்தும் விமானம் தொடர்ந்து தரையிறங்க வந்து கொண்டிருந்தது. 8.34 மணிக்கு பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நாங்கள் தரையிறங்கப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் விமானம் தரையிறங்கும் முதல் முயற்சி கைவிடப்பட்டு தொடர்ந்து வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது. 8.40 மணிக்கு மீண்டும் பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நாங்கள் தரையிறங்கப்போகிறோம் என்றார். அதன் பிறகு 8.43 மணிக்கு மீண்டும் பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஓடுதளம் நன்றாக தெரிகிறது என்றார்.
உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து 11வது நம்பர் ஓடுதளத்தில் தரையிறங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி கிடைத்த உடன் கடைசியாக விமானத்தில் இருந்து 8.44 மணிக்கு "Oh S**t… Oh S**t…" என்ற வார்த்தைதான் வந்தது. அதன் பிறகு விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் ஓடுபாதை 11 இன் இடதுபுறத்தில் சுமார் 50 மீட்டர் தொலைவில், வாசலுக்கு அப்பால் மோதி விபத்துக்குள்ளானது. அருகிலுள்ள கிராமத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில் விமானம் வலதுபுறம் திரும்பி, நிலப்பரப்பில் மோதுவது பதிவாகி இருந்தது.
விமானம் முதலில் மரங்களில் மோதியதாகவும், பின்னர் கீழே விழுந்து தீப்பிடித்ததாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராமதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மூடுபனி காணப்பட்டது செயற்கை கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. மேலும் விமானநிலையத்தில் விமானங்களுக்கு ஓடுதளம் குறித்தும், காற்றின் வேகம் குறித்தும் தகவல் கொடுக்க நவீன வசதிகள் இல்லை என்றும் விசாரணை அறிக்கை கூறுகிறது. விமான நிலைய ஓடுபாதையில் இருந்த அடையாளங்கள் மங்கிவிட்டதாகவும், ஓடுபாதை மேற்பரப்பில் சரளைக் கற்கள் இருந்ததாகவும், கடைசியாக ஓடுபாதை மறுசீரமைப்பு மார்ச் 2016 இல் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதன் பிறகு ஓடுபாதை மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




















