சாத்தூர்: அரசு அலுவலருக்குப் பினாமியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த நபர் - எம்.எல்.ஏ ஆ...
`அதிமுக கட்சியல்ல, அது ஒரு கிளை!’ – எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்த உதயநிதி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்றிரவு செஞ்சியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், ``இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த முதல் மாநிலமாக 11.19% சதவிகிதத்துடன் தமிழ்நாடு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க அரசும், அதன் அடிமைகளும் தமிழ்நாடு அரசுக்கு எதாவது ஒரு தொல்லை கொடுத்துவிட வேண்டும் என்று புதிய புதிய வழிகளில் முயற்சித்து வருகிறார்கள்.
அப்படித்தான் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறார்கள். அந்த புதிய கல்விக் கொள்கையை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டால், தமிழ்நாட்டுக்குள் இந்தி புகுத்தப்பட்டுவிடும். குறுக்கு வழியில் சமஸ்கிருதத்தையும் சேர்த்து திணிப்பார்கள்.
அமித் ஷாவின் வீடுதான் தலைமையகம்
அதனால்தான் ஆரம்பத்திலேயே தலைவர் ஸ்டாலின் அவர்கள், எங்களுக்கு புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று புறக்கணித்தார். அடுத்தது எஸ்.ஐ.ஆர் திருத்தத்தை தேர்தல் ஆணையம் மூலமாக கொண்டு வந்தார்கள்.
அதன் மூலம் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை நீக்குவதுதான் பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையத்தின் நோக்கம். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஆதரிக்கிறார். ஏனென்றால் அவருக்கும் வேறு வழி கிடையாது. ஆதரிக்கவில்லை என்றால் அமித் ஷா கோபித்துக் கொள்வார்.
அமித் ஷாவுக்கு எதிரில் மூச்சுவிடக் கூட பயப்படுகிறார் எடப்பாடி. தற்போது பா.ஜ.க-வின் கிளை அமைப்பாக அ.தி.மு.க திகழ்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வை நாம் ஒரு கட்சியாக நினைக்க வேண்டாம். அது ஒரு கிளை அவ்வளவுதான். டெல்லியில் உள்ள அமித் ஷாவின் வீடுதான் அதன் தலைமையகம்.
ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு அமித் ஷாவை சென்று சந்தித்த செங்கொட்டையன், அவரது கட்டளைப்படி ஒரு இயக்கத்தில் இணைந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.
அவர் என்ன உத்தரவை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். எஸ்.ஐ.ஆர் திட்டத்தை ஆதரித்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார் எடப்பாடி. அவர் யாருக்கெல்லாம் துரோகம் செய்திருக்கிறார் என்று பட்டியலிட்டால், அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
அவர் துரோகம் செய்யாமல் இருக்கும் ஒரே நபர் அமித் ஷா மட்டுமே. அ.தி.மு.க-வில் இருந்து ஒவ்வொருவரையாக நீக்கி வருகிறார். தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளை மொத்தமாக முடித்துவிட்டு, அந்த இடத்தில் தன்னுடைய கட்சியை வைப்பதுதான் பா.ஜ.க-வின் முழு நேர வேலை.

அதன்படி வாக்குத் திருட்டில் மட்டுமல்ல கட்சித் திருட்டிலும் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அ.தி.மு-கவை பா.ஜ.க மொத்தமான விழுங்கப் போகிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியாவது இந்தியாவில் விளங்கியிருக்கிறதா என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
பத்து ஓட்டுக்கு நான் பொறுப்பு… இந்த பத்து குடும்பத்திற்கு நான் பொறுப்பு… அந்த இரண்டு தெருவுக்கு நான் பொறுப்பு என்று உங்களுக்குள் பொறுப்புகளை பிரித்துக் கொள்ள வேண்டும். நாம் வெறும் கை தட்டி, விசில் அடித்து, கூச்சல் போட்டுவிட்டு கலையும் கூட்டம் இல்லை.
என்னைப் பார்க்க வந்த கூட்டமாக இருந்தால், பார்த்தவுடனே நீங்கள் எல்லாம் கிளம்பி இருப்பீர்கள். இவன் என்ன பேசுகிறான் என்று கேட்க வந்திருக்கிறீர்கள். தி.மு.க-காரன்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. அதன்படி உங்களிடம் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும்” என்றார்.














