`எனக்கெதிராகப் போராட்டம் நடத்தினால் சுடுகாட்டுக்கு தான் போவீர்கள்!'- அணிமாறிய உத...
`அவள் அந்த தவறை செய்திருந்தால், அதே மலையிலிருந்து தள்ளிவிடுங்கள்' - மணமகனை கொன்ற பெண்ணின் தாய்
புனேயில் தொழிலதிபர் கேதன் அகர்வால் என்பவருக்கு ஷியா கோயல் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் அதற்குள் ஷியா தனது காதலனுடன் இணைந்து கேதன் அகர்வாலை புனே அருகில் உள்ள மலை உச்சியில் இருக்கும் கோட்டைக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.
இக்கொலை தொடர்பாக ஷியாவும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இக்கொலைக்கு யார் காரணம் என்பது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றனர்.
ஷியாவிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கேதனை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று அவரிடம் பலமுறை கூறியும், திருமணத்தை ரத்து செய்ய அவர் மறுத்துவிட்டதாக கோயல் தெரிவித்ததார். அதோடு கேதன் கொல்லப்பட வேண்டும் என்ற திட்டத்தை சேதன் தான் வகுத்ததாக ஷியா தெரிவித்துள்ளார்.

ஆனால், கேதனை கொல்லுமாறு தன்னை ஷியாதான் வற்புறுத்தியதாக சேதன் குற்றம் சாட்டியுள்ளார்," என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆனால் இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் கொலைக்கான முழுத் திட்டமும் ஷியாவால்தான் தீட்டப்பட்டது என்பதைக் காட்டுகின்றன" என்று அந்த அதிகாரி கூறினார்.
இப்படுகொலையால் அதிர்ச்சியில் ஷியாவின் தந்தை பிரவீன் கோயல் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''எனது மகள் மீதான குற்றச்சாட்டுகளை இன்னும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மகள் இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்திருப்பாள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவள் ஒருபோதும் என்னிடம் பொய் சொன்னதில்லை. எப்போதும் சரியான பாதையையே பின்பற்றினாள்.
இருப்பினும், ஒரு தந்தையாகத் தனது உணர்வுகள் நீதிக்குத் தடையாக இருக்காது. என் மகள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் நீதி வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது. அவளுக்கு அதே தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு தந்தையாக, இதைத் தாண்டி என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது.
அவள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், லோஹாகட் கோட்டையில் கேதனுக்கு ஏற்பட்ட அதே கதிதான் தன் மகளுக்கும் ஏற்பட வேண்டும்''என்று கூறினார்.
ஷியாவின் தாயார் பூஜா கோயல் இது குறித்து கூறுகையில், ''அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோ அழைப்பு மூலம் பேசிக்கொள்வார்கள். அடிக்கடி சந்திப்பார்கள். ஒன்றாக இருக்கும்போது மகிழ்ச்சியாகவும் காணப்பட்டனர். கேதன் எங்கள் வீட்டுக்கு வந்து இரவு உணவு கூட சாப்பிட்டிருக்கிறார்.
ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதற்கான எந்த அறிகுறியும் எங்களுக்குத் தெரியவில்லை. கேதனைத் திருமணம் செய்துகொள்ள சியாவுக்கு விருப்பமில்லை என்பதில் உண்மையில்லை. திருமணத்திற்கு முந்தைய பயணமாக பாலிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக சுமார் 50,000 ரூபாய் செலவு செய்து பொருட்களை வாங்கினோம்.
கேதனைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று அவள் எங்களிடம் சொல்லியிருந்தால், திருமணத்திற்கான பொருட்களையும் ஆடைகளையும் வாங்க நாங்கள் ஏன் இவ்வளவு செலவு செய்திருக்கப் போகிறோம்?. நாங்கள் சில உண்மைகளை மறைத்துவிட்டோம் என்று கேதனின் தந்தை குறிப்பிட்டுள்ளார். அதில் உண்மையில்லை. இருவருக்கும் இடையேயான உறவில் ஏதேனும் சிக்கல் இருந்ததாகவோ அல்லது தனது மகளுக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்தது பற்றியோ தங்களுக்குச் சிறிதும் தெரியாது" என்று அவர் கூறினார்.


















