மீனாட்சி அன்னைக்கு பட்டாபிஷேகம்; களைகட்டிய மதுரை சித்திரை திருவிழா! | Photo Albu...
இணைந்த 7 எம்.பி-கள்: `மாநிலங்களவையில் பலம் கூடிய பாஜக' - ஏற்றுக்கொண்ட சபாநாயகர்
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) இருந்தனர். இவர்களில் ராகவ் சதா உள்ளிட்ட 7 உறுப்பினர்கள், கடந்த வெள்ளிகிழமை ஆம் ஆத்மி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். தாங்கள் பாஜகவின் சட்டமன்றக் குழுவில் இணைவதாக அவர்கள் அளித்த கடிதத்தை ஏற்றுகொள்வதாக மாநிலங்களவை அவைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று அறிவித்திருக்கிறார்..
எனவே, இனி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராகவ் சதா உட்பட பா.ஜ.க-வில் இணைந்த ஏழு உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இனி பா.ஜ.க-வின் ஒரு பகுதியாகவே கருதப்படுவார்கள்.
இதன் மூலம், 245 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அவையில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க தன்வசம் வைத்திருக்கிறது. அதேநேரம், ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை, மக்களவை என இரண்டிலும் தலா மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
தற்போது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது 136 உறுப்பினர்களுடன் வலுவான நிலையில் உள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த இணைப்பின் மூலம் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு அவையில் சட்டங்களை நிறைவேற்றுவது மேலும் எளிதாகியுள்ளது.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தற்போது மாநிலங்களவையில் குறைந்தது 136 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட, பா.ஜ.க-வைச் சாராத வேறு ஏழு உறுப்பினர்களும் இந்த அவையில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த இணைப்பு நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவருமான சஞ்சய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், ``பா.ஜ.க-வுடன் இணைந்த 7 உறுப்பினர்களின் முடிவு அப்பட்டமான கட்சித்தாவல் ஆகும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கட்சித்தாவல் தடைச் சட்டத்தை மீறும் செயலாகும். எனவே, அந்த 7 உறுப்பினர்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று அவைத்தலைவரிடம் மனு அளித்துள்ளேன்," என்றார்.
அவைத்தலைவர் இந்த இணைப்பிற்கு அங்கீகாரம் அளித்துள்ள போதிலும், சஞ்சய் சிங் அளித்துள்ள தகுதிநீக்க மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.














