"எனது இளமைக் காலத்தில் பொன்னான 15 ஆண்டுகளை ஆம் ஆத்மிக்காகவே அர்ப்பணித்தேன், ஆனால...
25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; `ரூ.289 கோடி அவ்வளவுதானா?' - PDUIA-ன் அவல நிலை!
இந்தியாவின் தொல்லியல் துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம்' (PDUIA), இன்று ஆள் நடமாட்டமில்லாத பாழடைந்த கட்டடம் போலக் காட்சியளிக்கிறது.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில், ரூ.289 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட வளாகம் எப்படி இருக்கிறது என்பது குறித்து India Today குழுவினர் நேரில் ஆய்வு செய்து, கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அதில், ``வளாகத்தின் முகப்பில் உள்ள பிரமாண்ட பெயர்ப் பலகையிலேயே 'Upadhyaya' என்ற சொல்லில் 'U' எழுத்தும், 'Institute' என்ற சொல்லில் 'I' மற்றும் 'E' எழுத்துகளும் மாயமாகியுள்ளன. இதுவே அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு ஒரு குறியீடாகத் தெரிகிறது.
வளாகத்திற்குள் நுழைவதே பெரும் சவாலாக இருந்தது. பலமுறை முயன்றும் நிர்வாகத் தரப்பில் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. வாயிலில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் சுமார் 15 நிமிடங்கள் தடுத்து நிறுத்திய பின்பே, ஒரு காவலரின் பாதுகாப்புடன் உள்ளே நுழைய அனுமதி கிடைத்தது.
உள்ளே சென்றபோது கண்ட காட்சி வியப்பளித்தது. விரிவான சாலைகள், நவீன கட்டடங்கள் என அனைத்தும் உள்ளன. ஆனால், ஒரு மாணவரைக்கூட பார்க்க முடியவில்லை. ஒரே மயான அமைதி...
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெயரை வெளியிட விரும்பாத உயரதிகாரி ஒருவர், `இங்கு நிரந்தர ஆசிரியர்கள் என்று யாரும் இல்லை. இது இந்த நிறுவனத்தின் வடிவமைப்பிலேயே இல்லை. இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதிகாரிகள்தான் வந்து அவ்வப்போது பாடம் எடுப்பார்கள். எங்களுக்கு என்று நிலையான பாடத்திட்டம் கிடையாது. அனைத்தும் களப்பணி (Fieldwork) மூலமே கற்பிக்கப்படுகிறது' என்றார். ஒரு கல்வி நிறுவனம் எப்படி பாடத்திட்டம் இல்லாமல் இயங்க முடியும் என்ற எங்கள் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
இந்த பிரமாண்ட வளாகத்தில் இந்தியா முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 10 மாணவிகள், 5 மாணவர்கள் என மொத்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 15 மட்டுமே! 1,000 பேர் அமரக்கூடிய கலையரங்கம், திறந்தவெளி திரையரங்கம், அருங்காட்சியகம் என அனைத்தும் இருந்தும், அவற்றை அனுபவிக்க அங்கு ஆட்கள் இல்லை.
நான்கு மாடிக் கட்டடத்தில் பெரும்பாலான அறைகள் பூட்டப்பட்டுள்ளன. லேப்கள் (Labs) மற்றும் நூலகங்கள் பெரும்பாலும் திறக்கப்படுவதே இல்லை என அங்கிருந்த காவலர்கள் தெரிவிக்கின்றனர். கழிவறைகள் பயன்பாட்டில் இல்லை. எங்கு பார்த்தாலும் தூசு படிந்து கிடக்கிறது. நிர்வாக ரீதியாக 6-7 அலுவலகங்கள் இங்கு இயங்குவதாகக் கூறப்பட்டாலும், ஓர் ஊழியரைக்கூட காண முடியவில்லை.
மாணவர்கள் தங்கும் விடுதிக்குச் சென்றபோது, அங்கும் இதே நிலைதான். மாணவ-மாணவிகள் ஒரே விடுதியில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மாணவர்களிடம் பேச அனுமதி கேட்டபோது, `மேலிடத்து உத்தரவு, யாரையும் பார்க்க அனுமதி இல்லை' எனக் கூறிவிட்டனர்.
ரூ.289 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்ட ஒரு நிறுவனம், ஏன் இவ்வளவு முடங்கிப் போயிருக்கிறது? நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்டம் இல்லாமல் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரால் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று ஏன் 'வெற்றுக்கூடாக' நிற்கிறது? எனப் பல கேள்விகள் எழுகின்றன.
நமது நாகரிகத்தின் வேர்களைக் கண்டறிய வேண்டிய ஒரு நிறுவனம், தனது அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்பது வரலாற்றுச் சோகம்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பி.எம். ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றக் காரணத்துக்காக, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய கல்வியாண்டுகளில் தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ.289 கோடி செலவில் கட்டப்பட்ட கல்லூரி செயலற்று கிடக்கிறது என கல்வி ஆர்வலர்கள் நொந்துக்கொள்கின்றனர்.

















