பாவூர்சத்திரம்: போதையில் இளைஞர் அடித்து கொலை; `101'க்கு கால் செய்து நாடகம்- நண்ப...
திருச்சி: பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை! - 5 பேரை தேடும் போலீஸ்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த உதய் (வயது: 36) என்பவர் திருச்சியில் நகை மதிப்பிடும் பணியைச் செய்து வருகிறார். அவர், குடும்பத்தோடு பெரிய செட்டித் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் அனைவரும் கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்குச் சென்று உள்ள நிலையில், உதய் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில் அவர் கடையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தங்கி உள்ளார். இந்த நிலையில், மதியம் அந்த இளைஞரின் வீட்டிற்குச் சென்ற ஐந்து பேர், 'உங்கள் ஓனரிடம் பேச வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் ஐந்து பேரையும் இளைஞர், உதய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பேசிக் கொண்டிருந்த அவர்கள் ஐந்து பேரும், திடீரென உதய்யை அடித்து அவரை வீட்டு பாத்ரூமில் வைத்து அடைத்து கதவை பூட்டிவிட்டனர். மேலும், இளைஞரையும் அடித்து கட்டிப்போட்டு விட்டு உதய் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து, உதய் கோட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த உதய், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், வீட்டில் ஒரு கிலோ அளவிற்கான நகை வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவை அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என உதய் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ நகை கொள்ளை அடிக்கப்பட்டதா என்பது குறித்தும், உதய்யை அடித்து அவர் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றது யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, முகமூடி அணிந்த நபர் ஆட்டோவில் ஏறி சென்றதால் அது குறித்தும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிக உள்ள முக்கிய பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம், திருச்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது



















