தேர்தல் முடிந்த சூட்டோடு விநாயகர், காளி கோயிலில் சாமி தரிசனம்; சொந்த ஊரில் வைகோ
சபாஸ்டியன் சாவே: மாரத்தான் வரலாற்றை மாற்றி எழுதிய நாயகன்! 42 கி.மீ-ஐ 1:59:30 நேரத்தில் கடந்து சாதனை!
மனித உடலின் தாங்கும் திறனுக்கு ஓர் எல்லை உண்டா? 42.195 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், இரண்டு மணி நேரத்திற்குள் பந்தய தூரத்தைக் கடக்க முடியுமா? என்ற நீண்ட காலக் கேள்விக்கு, 2026, ஏப்ரல் 26, லண்டன் வீதிகளில் அதிகாரபூர்வமாக விடை கிடைத்தது. அந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்து, விளையாட்டு உலகின் புதிய கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் கென்யாவைச் சேர்ந்த 31 வயது ஓட்டப்பந்தய வீரர் சபாஸ்டியன் சாவே (Sabastian Sawe).
வரலாறு காணாத சாதனை
லண்டன் மாரத்தான் 2026-ல் உலகமே ஆச்சரியப்படும் வகையில், 1 மணி 59 நிமிடங்கள் மற்றும் 30 விநாடிகளில் (1:59:30) பந்தய தூரத்தைக் கடந்து, மாரத்தான் வரலாற்றில் முதன்முறையாக இரண்டு மணி நேர எல்லைக்குக் கீழ் (Sub-Two-Hour) ஓடி உலக சாதனை படைத்துள்ளார் சபாஸ்டியன் சாவே. இதற்கு முன், மறைந்த கென்ய வீரர் கெல்வின் கிப்டம் 2023-ல் படைத்திருந்த 2:00:35 என்ற உலக சாதனையை, சாவே சுமார் 65 விநாடிகள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார்.

யார் இந்த சபாஸ்டியன் சாவே?
1995, மார்ச் 16-ல் கென்யாவில் பிறந்த சாவே, நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் பல ஆண்டுகளாகத் தன்னை மெருகேற்றி வந்தவர். 2024 வலென்சியா மாரத்தான், 2025 லண்டன் மற்றும் பெர்லின் மாரத்தான் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர். இவர் ஊக்கமருந்து விதிகளுக்கு மிகவும் கட்டுப்பட்டு நடக்கும் தூய்மையான விளையாட்டை ஆதரிப்பவர். முந்தைய போட்டிகளின் போது சுமார் 25 முறை ஊக்கமருந்து பரிசோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு, தனது நேர்மையை உலகிற்கு நிரூபித்தவர்.
சாதனைகள்
உலக சாம்பியன் (அரை மாரத்தான் - 2023): லாட்வியாவின் ரிகாவில் நடைபெற்ற போட்டியில், அரை மாரத்தான் பிரிவில் தங்கம் வென்று உலக சாம்பியன் மகுடத்தைச் சூடினார்.
அரை மாரத்தான்: 21 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 58 நிமிடங்கள் மற்றும் 05 விநாடிகளில் கடந்ததே இவருடைய சிறந்த நேரம்.
10 கிலோமீட்டர் ஓட்டம்: 10 கி.மீ சாலை ஓட்டப் பந்தயத்தை 26 நிமிடங்கள் 49 விநாடிகளில் கடந்து பிரமிக்க வைத்துள்ளார்.
கோபன்ஹேகன் அரை மாரத்தான் (2024): டென்மார்க்கில் நடைபெற்ற புகழ்பெற்ற போட்டியில் பங்கேற்று, பல உலகத் தர வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

அரை மாரத்தானில் இருந்து 42 கிலோமீட்டர் முழு மாரத்தானுக்குத் தனது கவனத்தைத் திருப்பிய அவர், அங்கேயும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தினார். 2024-ல் வலென்சியா மாரத்தானில் வெற்றி பெற்ற அவர், அதனைத் தொடர்ந்து 2025-ஆம் ஆண்டில் லண்டன் மாரத்தான் மற்றும் பெர்லின் மாரத்தான் என உலகப் புகழ்பெற்ற போட்டிகளில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
அரங்கேறிய அதிவேகப் போர்
லண்டன் பந்தயம் தொடங்கியதிலிருந்தே சபாஸ்டியன் சாவே, எத்தியோப்பியாவின் யோமிஃப் கெஜெல்சா, உகாண்டாவின் ஜேக்கப் கிப்லிமோ ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவியது.

முதல் பாதி தூரத்தை சுமார் 1:00:29 என்ற நேரத்தில் கடந்த இவர்கள், 30 கிலோமீட்டருக்குப் பிறகு தங்களின் வேகத்தை அதிரடியாக அதிகரிக்கத் தொடங்கினர். 35 கிலோமீட்டரை நெருங்கும்போது சாவே மற்றும் கெஜெல்சா இருவரும் மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் முன்னேறினர்.
இறுதிச் சுற்று
பந்தயத்தின் இறுதி இரண்டு கிலோமீட்டர்கள் மீதமிருக்க, சபாஸ்டியன் சாவே தனது முழு பலத்தையும் திரட்டி, தனியாக முன்னேறத் தொடங்கினார். வழியெங்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்த, புயலெனப் பாய்ந்து வந்த அவர் வெற்றி எல்லைக் கோட்டைத் தொட்டபோது கடிகாரம் 1:59:30 என நின்றது.
இரண்டாம் இடம் பிடித்த எத்தியோப்பிய வீரர் யோமிஃப் கெஜெல்சாவும் 1:59:41 என்ற நேரத்தில் பந்தயத்தைக் கடந்து ஆச்சரியப்படுத்தினார். மூன்றாம் இடம் பிடித்த கிப்லிமோ 2:00:28 என்ற நேரத்தில் பந்தயத்தை முடித்தார். அதாவது முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுமே முந்தைய உலக சாதனையை முறியடித்திருந்தனர் என்பது இந்தப்போட்டியின் வேகத்தைக் காட்டுகிறது.

சாதனைக்கு உதவிய ஷூ!
இந்த வரலாற்றுச் சாதனைக்கு வீரர்களின் உழைப்பு மட்டுமன்றி, தொழில்நுட்பமும் ஒரு முக்கிய காரணம். சபாஸ்டியன் சாவே அணிந்திருந்த `அடிடாஸ் அடிஸீரோ அடியோஸ் ப்ரோ ஈவோ 3' (Adidas Adizero Adios Pro Evo 3) என்ற ஷூக்கள் வெறும் 97 கிராம் மட்டுமே எடையுள்ளவை. இது வழக்கமான ஷூக்களை விட மிகவும் இலகுவானது மற்றும் ஓடும்போது அதிக ஆற்றலைத் திரும்பத் தரும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
எதுவும் சாத்தியமே...
இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய சாவே, “இன்று நான் படைத்திருப்பது எனக்கான சாதனை மட்டுமல்ல, லண்டனில் கூடிநின்ற அனைவருக்கும் உரியது. நான் இன்று லண்டனில் வரலாறு படைத்துள்ளேன். புதிய தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: சரியான தயாரிப்பும், கடின உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். எதுவும் சாத்தியமே!” என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

முன்பு 2019-ல் மற்றொரு கென்ய வீரரான எலியுட் கிப்சோகே இரண்டு மணி நேரத்திற்குக் கீழ் ஓடியிருந்தாலும், அது ஒரு தனியான நிகழ்வாக (Unofficial) மட்டுமே கருதப்பட்டது. ஆனால், முறையான ஒரு அதிகாரபூர்வ பந்தயத்தில், சக வீரர்களுடன் போட்டியிட்டு இரண்டு மணி நேரப் பெருஞ்சுவரை முதன்முதலில் உடைத்தெறிந்த முழுப் பெருமையும் சபாஸ்டியன் சாவேவையே சேரும். மனித முயற்சியின் மகத்தான வெற்றியாக இந்த நாள் விளையாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்!


















