`எஸ்.பி.வேலுமணியை அதிமுக பொதுச்செயலாளராக்கு சாமி' - குண்டம் இறங்கி வேண்டிய கோவை ...
இரண்டு மசோதாக்கள் அமல்படுத்த பாஜகவின் பிளான்; ராகுலை சந்தித்த கிரண் ரிஜிஜு - ராகுல் சொன்ன 'நோ'!
தற்போது டெல்லியில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இதை யாராவது சொன்னால் தான் தெரியும் போல. தினமும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அமளி ஏற்படத் தொடங்கிய வேகத்திலேயே சபை ஒத்தி வைக்கப்பட்டு விடுகிறது.
இன்றும் இதே காட்சி தான். இன்றும் சபை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒத்திவைப்பிற்குப் பிறகு, இன்று (ஆகஸ்ட் 5) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது அறையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சந்தித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏன் சந்திப்பு?
தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா - இந்த இரண்டு மசோதாக்களையும் கொண்டு வருவதில் பாஜக அரசு முனைப்புடன் இருக்கிறது.
இதற்காகவே கிரண் ரிஜிஜு ராகுல் காந்தியைச் சந்தித்திருக்கிறார். இந்த இரண்டு மசோதாவிற்கும் காங்கிரஸின் ஒத்துழைப்பைக் கேட்டிருக்கிறது பாஜக.
ஆனால், இந்த இரண்டிற்குமே உடனடியாகவே பெரிய 'நோ' சொல்லிவிட்டாராம் ராகுல் காந்தி.
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வைத்தும், காங்கிரஸின் ஒத்துழைப்பை வைத்தும் இந்தக் கூட்டத்தொடரில் இந்த இரு மசோதாக்களையும் அமல்படுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறது பாஜக.
ஆனால், அது இப்போது நடக்காது போலும்.
அமளி..!
கூடவே, ராமர் கோயில் நிதி கையாடல் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்... ஜூலை 20-ம் தேதி டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறைத் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இது இரண்டும் நடக்கவில்லை என்றால், அவையில் தொடர்ந்து அமளி ஏற்படும் என்றும் கிரண் ரிஜிஜுவிடம் தெரிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.
ஆக மொத்தம், இந்தக் கூட்டத்தொடரிலும் பாஜகவின் பிளான் வொர்க் அவுட் ஆகாதோ?















