Iran: `போர் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்' - அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!
'உதயசூரியன் சின்னம்' - மதிமுகவை நிர்பந்திக்கும் திமுக; டென்ஷனில் துரை வைகோ?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ம.தி.மு.க - தி.மு.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள நிலையில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது ம.தி.மு.க. உதயசூரியன் சின்னத்திலேயே ம.தி.மு.க வேட்பாளர்கள் களமிறங்கி 4 இடங்களில் வெற்றிபெற்றனர். அதையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தில் திருச்சியில் போட்டியிட்டபோதும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க நிர்பந்தித்தது தி.மு.க. அதற்கு 'உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்' ஆவேசம் காட்டினார் துரை வைகோ. ஒருவழியாக திமுகவும் சம்மதித்தது. ஆனால் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொல்லி நிர்பந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க சீனியர்கள் நிர்வாகிகள் "2026 சட்டமன்றத் தேர்தலில் 12 இடங்களில் போட்டியிட்டு குறைந்தது 7 இடங்களில் வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சி அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. ஆனால் தற்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டு 6 தொகுதிகளை ஒதுக்குங்கள், தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம் என கேட்டிருந்தோம். ஆனால் 4-5 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என கறார் காட்டுகிறது அறிவாலயம்.

அதிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் நீங்கள் நிற்க வேண்டும் என தலைவரிடம் முதலமைச்சரே நேரடியாக கோரியிருக்கிறார். முதல்வரே நேரடியாக பேசுவதால் பொதுச்செயலாளர் வைகோ ஒப்புக்கொள்ளலாமா என்ற சிந்தனையில் இருக்கிறார்.
ஆனால், இதில் துரை வைகோவுக்கு துளியும் விருப்பமில்லை. 'நாடாளுமன்றத் தேர்தலில் போராடி தனிச் சின்னத்தில் நிற்கும் வாய்ப்பை பெற்றோம். இப்போது மீண்டும் தனிச்சின்னத்தில் நிற்க சொல்வது ஏற்கவே முடியாது. தி.மு.க-வின் இந்த கோரிக்கையை நாம் ஏற்க கூடாது' எனக் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார்" என்றனர்.
















