பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, பாரதியார் இல்லம், மணப்பாடு கடற்கரை- தூத்துக்குடி முக்க...
கணவர், அவரின் 2-வது மனைவி உட்பட 4 பேரை கொன்று எரித்த பெண்; கதறி அழுது நாடகம்... சிக்கியது எப்படி?!
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகில் உள்ள ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்தவர் ராம் சிங் செளதரி. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம் சிங் 2005ம் ஆண்டு சுனிதா என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணத்தின் மூலம் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. 2019ம் ஆண்டு தனது முதல் மனைவியின் எதிர்ப்பையும் மீறி சூர்யா என்ற பெண்ணை ராம் சிங் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சூர்யா மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருக்கிறார். அதோடு அவர் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ராம் சிங் மற்றும் சூர்யா, ராம் சிங் தாயார் உட்பட 4 பேர் ராம் சிங் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் கிடந்தனர்.
போலீஸார் காரை சோதித்தபோது காரில் ராம் சிங்கின் இரண்டாவது மனைவி மற்றும் தாயார் உட்பட 3 பேர் எரிந்த நிலையில் கிடந்தனர். ராம் சிங் காரில் இருந்து சற்று தள்ளி கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீஸார் ராம் சிங் வீட்டிற்கு சென்று அவரது முதல் மனைவி சுனிதாவிடம் விசாரித்தபோது தனது கணவர் அவரது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் என்று தெரிவித்தார். ஆனால் வீட்டை சோதித்த போது அங்கு வீட்டு சுவற்றில் ரத்தக்கறை படிந்திருந்தது.
இதையடுத்து ராம் சிங்கின் மைனர் மகனிடம் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீஸ் அதிகாரி அகர்வாலா கூறுகையில், ராம் சிங்கின் இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அடிக்கடி ராம் சிங் தனது முதல் மனைவியை அடித்து உதைத்துள்ளார். இது குறித்து ராம் சிங் மகன் அளித்த வாக்குமூலத்தில், ராம் சிங் அடிக்கடி குடிபோதையில் தனது முதல் மனைவி, மகன், மகளை அடித்து உதைத்துள்ளார். அதோடு அவரது முதல் மனைவியை வீட்டு வேலை செய்யும்படி நிர்ப்பந்தம் செய்ததாகவும், வீட்டை விட்டு வெளியில் செல்ல விடாமல் துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.
அப்பாவை ஒரு நாள் கொலை செய்வேன்
இதனால் ராம் சிங் மீது அவரது மகனுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஒரு நாள் அப்பாவை கொலை செய்வேன் என்று அடிக்கடி தனது தாயாரிடம் மைனர் மகன் தெரிவித்துள்ளார். மைனர் தனது தந்தையை கொலை செய்ய முன்கூட்டியே திட்டமிட்டு கத்தியை ஆன்லைனில் வாங்கி இருக்கிறார். சம்பவத்தன்று இரவு சுனிதாவிற்கும், அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரது மகன் தனது தந்தையிடம் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இரவில் ராம் சிங் உறங்கிய பிறகு மைனர் மகன் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் சத்தம் கேட்டு எழுந்த அவரது இரண்டாவது மனைவியையும் கொலை செய்துள்ளார். இந்த களேபரத்தில் ராம் சிங் தாயார் மற்றும் உறவினர் மகிமா ஆகியோர் எழுந்தனர். அவர்கள் வெளியில் கொலையை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவர்களையும் கொலை செய்தார். இக்கொலைக்கு தனது மகனுக்கு சுனிதாவும் அவரது மகளும் உதவி செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து டீசலை எடுத்து, உடல்கள் மீது ஊற்றினர்.
பின்னர் உடல்களை இழுத்து, ஸ்கார்பியோ காரில் ஏற்றினர். வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்று தீ வைத்து எரித்துள்ளனர். தடயவியல் ஆய்வில் எரிக்கப்பட்ட மூன்று உடல்களும் பின் இருக்கையில் மடங்கிய நிலையில் கிடந்தது. இதன் மூலம் அவர்கள் காருக்குள் வருவதற்கு முன்பே கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர். சிறுவன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது தந்தையை உணவில் விஷம் வைத்து பலமுறை கொல்ல முயன்றதாகவும், சுரங்கப் பகுதியில் உள்ள மலையிலிருந்து தள்ள முயன்றதாகவும், ஆனால் அது தோல்வியடைந்ததாகவும் கூறினார். இக்கொலைகளைச் செய்துவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து அமர்ந்து தனது கணவர் இறந்ததற்காக சுனிதா நெஞ்சில் அடித்து அழுதததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.





















