சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து? - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு... வீட்...
கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமண்யர்: இங்கே வேல் செலுத்தினால் வேண்டுதல் நிறைவேறும்!
முருகப்பெருமான் அருளும் தலங்கள் ஒவ்வொன்றாகத் தேடித் தேடிச் சென்று திருப்புகழ்பாடி நமக்கெல்லாம் அந்த முருகனின் அருட்கடாட்சம் கிடைக்கும்படி வழி செய்தார் அருணகிரிப் பெருமான். அப்படி அவர் பாடிய தலங்களில் ஒன்று வேலாயுதம்பாளையம்.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதியில் அமைந்திருக்கும் தலம். இங்கு மலைமீது அருளும் பாலசுப்பிரமண்யர் திருக்கோயிலைக் கட்டி, இந்தப் பகுதிக்கு வேலாயுதம்பாளையம் என்று பெயரிட்டவரும் அவர்தான் என்கிறார்கள்.
அருணகிரிநாதர் இத்தலத்தைப் பாடியபோது, 'புகழிமலை மேவு பெருமாளே' எனப் பாடிப் பரவினார். சமணப் படுகைகள் கொண்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மலைத் தலத்தின் சிறப்புகளைக் காண்போம்.

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில் இயற்கை எழில் கொஞ்சும் சிறு குன்றின் மீது அமைந்திருக்கும் அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள்.
பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனும், அதியன் என்ற மன்னனும் போர்க் காலங்களில் இம்மலையில் உள்ள குகைகளை, போர்த் தந்திர வேலைகளுக்குப் பயன்படுத்தியதாக திருக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
புகழூர் என்று அழைக்கப்படும் இக்குன்று அமைந்துள்ள இடத்தில் சமண முனிவர்கள் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்ததாகவும், சங்க காலத்தில் இப்படி அடைக்கலம் புகும் இடங்களை புகழூர் என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், 8 - ம் நூற்றாண்டில் அரியணையில் அமர்ந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்கீர்த்தியில் இவ்வூர் `புகழியூர்' என அழைக்கப்பட்டதாகவும் இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் உரைக்கின்றன.
சுமாா் 400 அடி உயரமுள்ள இந்த மலையின் அடிவாரத்தில் விநாயகா் சந்நிதி உள்ளது. நுழைவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்குத் திசையில் மயில்வாகன சந்நிதியும் அமைந்துள்ளது.
மேலும் அந்த மலையைக் காவல் காக்கும் அய்யனாருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. இதிலிருந்து 48 படிகள் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவன்-பாா்வதி, ஒளவையாா் சுதை சிற்பங்கள் அமா்ந்த நிலையில் உள்ளன.
இவற்றின் அருகில் கிழக்குத் திசை நோக்கி ஏழு கன்னிமாா்கள் சந்நிதி உள்ளது. கடும் தவத்தில் இருக்கும் சுதையாலான அகத்தியரின் சிலையைத் தரிசிக்கலாம். மேலும் 14 படிகள் ஏறினால் வட திசை பாா்த்த இடும்பன் சந்நிதி உள்ளது.

தொடா்ந்து ஏறினால் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மூலஸ்தானத்திற்குள் நுழையலாம். முருகப்பெருமான் கருவறையில் பாலசுப்பிரமண்யராக கையில் வேலேந்திக் காட்சி அருள்கிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் வஜ்ஜிரம், சக்தி ஆகியவற்றோடு அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடனும் பாலசுப்பிரமணியராக கடவுள் காட்சி அருள்கிறாா்.
இந்தக் கோயிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தைக் குறிக்குமாம். இதிலிருந்து இந்தக் கோயிலின் புராதனத்தை அறியமுடிகிறது.
இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். செய்த பாவங்கள் யாவும் தீர்ந்து நல்வாழ்வு அமையவேண்டி, பக்தர்கள் தங்கள் கையில் வேலோடு இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத் தடை விலகி, இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும்.
சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். ஐப்பசி சஷ்டி தினத்தில் தினை மாவு வைத்து வழிபடுவது கூடுதல் விசேஷம்.
மழை பெய்ய வேண்டியும், ஊர் ஒற்றுமைக் காகவும் இக்கோயிலின் 315 படிகளுக்கும் நெய் தீபம் அல்லது சூடமேற்றி படி பூஜை செய்வது வழக்கம்.
தைப்பூச தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் இளநீர்க் காவடி எடுத்து வந்து, முருகப்பெருமானைத் தரிசித்துச் செல்கின்றனர். சூரசம்ஹாரமும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கிருத்திகை தினத்தில் மூன்று வேளையும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இக்கோயிலில் அன்னதானம் செய்து வழிபட்டால், குடும்பம் செழித்தோங்கும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை வேலாயுதம்பாளையம் சென்று பாலசுப்பிரமண்யரை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கையில் வளமும் நலமும் கூடும்.




















