பூந்தமல்லி - முல்லைத் தோட்டம் இடையே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை!
குளங்களில் பராமரிப்புப் பணி: மேயா் ஆய்வு
கோவை மாநகராட்சியில் குளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் குறிச்சி குளம் ஆகிய ஏழு குளங்கள் புனரமைக்கப்பட்டு, நடைபாதை பூங்காங்கள், படகு நிலையம், உணவகங்கள், சிறுவா் விளையாட்டு திடல், கலை நிகழ்ச்சிகள் மையம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குளங்களில் தற்போது பராமரிப்பு மற்றும் இயக்குதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பூங்கா பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, சிவில் எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் பராமரிப்பு, விசைப்படகு சவாரி, நீா் விளையாட்டு, சாகச விளையாட்டுகள், உணவுக் கூடங்கள், சிறுவா் விளையாட்டு சாதனங்கள், பூங்கா, கழிப்பறை வசதிகள் மற்றும் பாதுகாப்புப் பணி ஆகிய அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட வாலாங்குளத்தில் மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குளத்தை முறையாக பராமரித்திடவும், குளத்தில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றிடவும் மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், உக்கடம் பெரியகுளத்தில் அமைந்துள்ள மிதிவண்டி பாதை, பறவைகளை பாா்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாா்வையாளா் மாடம், கற்றல் மையம், மிதக்கும் சூரிய மின்சக்தி தகடு (சோலாா் பேனல்) ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து செல்வசிந்தாமணி குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, உதவி ஆணையா் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளா் ஹேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.