பீகார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து: 4 நோயாளிக...
கேரளம்: ஆண் நண்பருடன் சென்று வந்த மனைவியை கொலைசெய்த கணவன் - சோகத்தில் முடிந்த காதல் திருமணம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(46). வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஹசீனா(38). வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அம்ரிதா சுரேஷ் (18), ஆனந்த் (17), ரோஷன் (11), அனயா (9) ஆகிய 4 பிள்ளைகள் உள்ளனர்.
திருவனந்தபுரம் நாலாஞ்சிறா உதியன்னூர் கோவில் அருகே கீர்த்திநகரில் லீசுக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். நேற்று வீட்டின் தரைத்தளத்தில் இருந்த பிள்ளைகளுக்கு, முதல் மாடியில் இருந்து தாய் ஹசீனா பீவி-யின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. பிள்ளைகள் மாடியில் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ஹசீனா பீவி கழுத்து அறுபட்ட நிலையில், இறந்துகிடந்தார்.
தந்தை சுரேஷ் தாயை கொலை செய்துவிட்டு, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியைக் குளியலறை குழாயில் கழுவி, படுக்கையறையில் வைத்த பிறகு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் காரில் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதுபற்றி மூத்த மகள் அம்ரிதா சுரேஷ் காவல் நிலையத்திற்கு போன் செய்து, "அம்மாவை அப்பா கொலை செய்துவிட்டார்" என தகவல் தெரிவித்துள்ளார்.
போலீஸார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. தாயின் உயிரற்ற உடலைக் கண்டு பிள்ளைகள் கதறி அழுதது, அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சி.சி.டி.வி காட்சிகளையும், மொபைல் டவர் இருப்பிடத்தையும் மையமாகக் கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஹசீனாவிற்கு வேறொரு ஆண் நண்பருடன் பழக்கம் இருப்பதாகக் கூறி சுரேஷ் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். பிரச்சனை முற்றியதால், ஹசீனா தனது நண்பருடன் கடந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். மூன்று நாட்களுக்குப்பின் கடந்த திங்கள்கிழமைதான் அவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார். இதனால் இருவருக்குமான பிரச்சனை முற்றியது.

குடும்ப பிரச்னை குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை மண்ணந்தலா காவல் நிலையத்தில் ஹசீனா புகார் அளித்தார். காவல் நிலையத்தில் சுரேஷ் மற்று ஹசீனாவை அழைத்து சமரசம் செய்த நிலையில் அவர் வீட்டிற்கு சென்றார். செவ்வாய்க்கிழமை இரவில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அது நேற்று அதிகாலை வரை நீடித்தது. இதற்கிடையில் ஹசீனாவும் சுரேஷும் மேல் மாடியில் உள்ள படுக்கையறைக்குச் சென்றபின்னரும் வாக்குவாதம் தொடர்ந்ததால் அது கொலையில். முடிந்துள்ளது" என்றனர்.



















