Asia Cup 2025: பாகிஸ்தான் வீரர் 2 போட்டிகளில் இடைநீக்கம்; பும்ரா, சூர்யகுமார் மீ...
சதுரகிரியில் ஐப்பசி பௌர்ணமி விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்
விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் இன்றும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால், இது சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது.
மேலும், இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புவதால், தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர்.
தற்போது சதுரகிரி கோயிலுக்கு முன் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அதிகாலை முதலே பக்தர்கள் மலையடிவாரப் பகுதியில் குவிந்தனர்.

பின்னர் காலை 6 மணிக்கு கதவு திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலில் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி எனவும், பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















