Anbe Diana: ``'டைரக்ஷன் மட்டும் பண்ணுங்க; ஹீரோவா வேணாம்' என்றார்கள்; ஆனால்..." -...
சரத்பவார் கட்சி எம்பி-க்கள் 6 பேர் பாஜக கூட்டணிக்குத் தாவ முயற்சி? காங். தலைவர் கருத்தால் சலசலப்பு
மகாராஷ்டிராவில் ஏற்கனவே சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்து இரு கட்சிகளாகச் செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்குத் தாவிவிட்டனர். அவர்களைப் பின்பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சரத்பவாருக்கு வயதாகிவிட்டதாலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மற்றொரு அணியின் தலைவர் அஜித்பவார் இறந்துவிட்டதாலும் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிட சரத்பவார் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மக்களவை உறுப்பினர்களிடையே அதிருப்தி நிலவுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ்சவான் கூறியிருப்பது, மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரத் பவாரின் அணியைச் சேர்ந்த 5 முதல் 6 எம்.பி.க்கள் அமைதியற்ற சூழலில் இருப்பதாகவும், உத்தவ் தாக்கரே அணியில் சமீபத்தில் நடந்த கட்சித் தாவல்களைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணிகளை மாற்ற பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர் என்று முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான் பகிரங்கமாகக் கூறினார்.
தேசிய ஜனநாயக் கூட்டணியுடன் உடன் கூட்டணி வைப்பது அல்லது கட்சியை வேறு கட்சியுடன் இணைப்பது போன்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், ''பாஜக எதிர்க்கட்சிகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. உத்தவ் தாக்கரேவின் கட்சிக்குச் செய்ததைப்போலவே, மோடி-அமித் ஷா அரசு சரத் பவாரின் கட்சிக்கும் செய்யக்கூடும்” என்று அவர் எச்சரித்தார்.
உத்தவ் தாக்கரேவின் கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் அணி மாறியதைக் குறிப்பிட்டுப் பேசிய சவான், “ஆறு எம்பிக்கள் கட்சி மாறியதைத் தொடர்ந்து, சரத் பவார் கட்சியின் எம்பிக்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தியும் அமைதியற்ற சூழலும் நிலவி வருகிறது.
அவர்கள் உண்மையில் மஹாயுதி கூட்டணியில் உள்ள ஏதாவது ஒரு கட்சியில் இணைவார்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் எனக்குக் கிடைத்த தகவலின்படி அவர்கள் தங்களது எதிர்காலம் குறித்து கவலையில் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
சமீபத்தில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணியிடம் இருந்து வாய்ப்பு வந்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என சரத்பவார் கட்சியின் ஷிரூர் தொகுதி எம்பி அமோல் கோல்ஹே சமீபத்தில் கூறியிருந்த கருத்துக்களை மேற்கோள் காட்டி பிரித்விராஜ் சவான் இந்த அதிருப்தி குறித்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
கோல்ஹேவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பியதைத் தொடர்ந்து, தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் பின்னர் விளக்கம் அளித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) செயல்தலைவர் சுப்ரியா சுலே, “எங்கள் கட்சியைப் பற்றி பிரித்விராஜ் சவானுக்கு என்ன தகவல் கிடைத்துள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் அவரை தொலைபேசியில் அழைத்து இதுகுறித்து பேசி, கூடுதல் விவரங்களைக் கேட்பேன்.
எங்களது எட்டு எம்பிக்களும் முழு ஒற்றுமையுடன் இருக்கிறோம், ஒன்றாகவே பயணிக்கிறோம் மற்றும் அனைத்துப் பிரச்னைகளையும் எங்களுக்குள் விவாதிக்கிறோம். எங்கள் கட்சியில் யாரும் தங்களது எதிர்காலம் குறித்து கவலையடையவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்று தெரிவித்தார்.
சிவசேனா(உத்தவ்) கட்சி எம்.பி.சஞ்சய் ராவுத் இது குறித்து அளித்த பேட்டியில், ''பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகக் கடுமையான அழுத்த அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தல் மற்றும் வற்புறுத்தும் அரசியலை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது'' என்று ராவுத் குறிப்பிட்டார்.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்தியதற்கு பாஜகவின் இந்த அழுத்த அரசியலே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.













